அமெரிக்காவில் தொழில் புரிவதற்கு அனுமதிக்கும் பொருட்டு வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் `எச் 1 பி' என அழைக்கப்படும் விசா விவகாரம் தொடர்புகளுக்கு அமெரிக்கர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் இரண்டாண்டு பணியாற்றுவதற்கு, `எச் 1 பி' விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க கம்பெனிகளில் நியமிக்க திறமையானவர்கள் இல்லாத பட்சத்தில் எழும் பற்றாக்குறைக்கு வெளிநாட்டவரை அமர்த்தவே இந்த விசா வழங்கப்படுகிறது. சமீபகாலமாக, அமெரிக்க கம்பெனியின் செயற்பாடு முடங்கி இந்தியா உட்பட வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் தான் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் இந்த நிறுவனங்கள் செய்யும் வர்த்தகம், அதனால் அரசுக்குக் கிடைக்கும் வருவாயை இழக்கக்கூடாது என்பதால், இந்திய நிறுவனங்களில் பணியாற்ற தேவைப்படும் வெளிநாட்டவரை அழைத்துக் கொள்ள விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு நிறுவனமும், தங்களுக்கு இவ்வளவு ஊழியர்களை வெளிநாட்டில் இருந்து அமர்த்த வேண்டும் என்று விண்ணப்பம் செய்வர். அதை அமெரிக்க குடியேற்றத்துறை பரிசீலித்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் விசாக்களை வழங்கும். கடந்தாண்டு அளிக்கப்பட்ட, `எச் 1 பி' விசாக்களில் 80 சதவீதம், இந்திய நிறுவனங்களுக்கு போயுள்ளன. இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தான் கணிசமான விசாக்களை பெற்றுள்ளன. இதன் மூலம், இன்போசிஸ் 4560 பேரையும், விப்ரோ 2580 பேரையும் தனது அமெரிக்கக் கிளை நிறுவனத்தில் அமர்த்திக் கொள்ளலாம். இந்த வகை விசா அதிகமாக அளிக்கப்பட்ட முதல் 10 நிறுவனங்களில், இந்தியாவை சேர்ந்வை ஆறு.அமெரிக்காவை சேர்ந்தவை இரண்டு. இந்த இரு நிறுவனங்களும் அமெரிக்காவில் தங்கள் வர்த்தகத்தை செய்யவில்லை இந்தியாவில் தான் அதிக வர்த்தகம் செய்கின்றன.
இந்திய கம்பெனிகளுக்கு 80 சதவீத விசா வழங்கியுள்ளமை, அமெரிக்கர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க கம்பெனிகளில் திறமையான ஆட் பற்றாக்குறையை போக்கவே, இந்த விசா வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும். அமெரிக்கர்கள் இந் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.