அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் போவது யாரென்ற கருத்துக் கணிப்பில் ஜோன் மெக்கெய்ன், பராக் ஒபாமா, ஹிலாரி கிளின்டன் ஆகிய மூவருமே முன்னிலையில் உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் ஜோன் மெக்கெய்ன் உறுதியாகிவிட்ட நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வில் ஹிலாரி, ஒபாமா இடையே இன்னமும் இழுபறி நிலை நீடித்து வருகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் குறித்த கேள்விகளுடன் அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் 50 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவதாகவும், 37 சதவீதம் பேர் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மீதிப் பேர் சுயேச்சைகளுக்கும் மற்றவர்களுக்கும் வாக்களிக்கப் போவதாகக் கூறினர்.
ஆனால் ஜோன் மெக்கெய்ன், பராக் ஒபாமா, ஹிலாரி கிளின்டன் ஆகியோரில் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு மூவருக்கும் சமமான அளவில் புள்ளிகள் கிடைத்தன.
அனுபவம் மற்றும் தலைமைப் பண்பில் ஹிலாரி சிறந்து விளங்குவதாகவும், மக்களிடம் கரிசனம் கொண்டிருத்தல் போன்ற பல்வேறு பண்புகளில் ஒபாமா சிறந்தவர் என்றும் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.