நாட்டில் குண்டுவெடிப்புகளால் மக்கள் அச்சமும் பீதியும் அடைந்திருக்கையில் அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி பஸ்களில் பயணிகளின் உடமைகளைப் பறிப்போரால் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பெரும் குண்டுப்புரளியேற்பட்டது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது;
வெள்ளவத்தை பகுதியில் நேற்று நண்பகல் பஸ் ஒன்றில் பயணம் செய்த தமிழ் பெண் ஒருவரின் கைப்பையை அறுத்த `பிற்பொக்கற்'
காரனொருவன், பஸ்ஸிற்குள் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியவாறு பஸ்ஸிலிருந்து குதித்து அந்தக் கைப்பையுடன் வேறொரு பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டான்.
இதையடுத்து அந்த பஸ் அவசர அவசரமாக நிறுத்தப்படவே அதிலிருந்த பயணிகள் விழுந்தடித்துக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளனர்.
இந்த நேரத்தில், கைப்பையை பறிகொடுத்த பெண்ணும் கீழே இறங்கி, தனது கைப்பையை பறித்துக் கொண்டு ஒருவன் ஓடுவதாகவும் அவனே, பஸ்ஸினுள் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டுத் தப்பி விட்டதாகவும் எனத்தெரிவிக்கவே அந்த பஸ் பயணிகள் நிம்மதியுடன் மீண்டும் பஸ்ஸில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர்.
எனினும், கைப்பையை பறிகொடுத்த பெண் கவலையுடன் வீதியோரத்தால் நடந்து சென்று கொண்டிருந்த போது வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் முன்பாக குண்டு புரளியேற்பட்டு மக்கள் நாலாபுறமும் ஓடிக் கொண்டிருந்தனர்.
வீதிக்கு வந்த பொலிஸாரும் அங்கு பெரிய கைப்பையொன்று கிடப்பதை அவதானித்து, அப்பகுதியிலுள்ள கடைகளை பூட்டுமாறு கூறியதுடன் அப்பகுதிக்கு எவரையும் வரவேண்டாமென எச்சரித்தனர்.
முதலில் அவ்விடத்திற்குச் சென்ற, சற்று துணிச்சல் மிக்க பொலிஸ் கான்ஸ்டபிள் கைப்பையை தூக்கி பார்த்த போது அது சற்று பாரமாக இருக்கவே அச்சத்தால் அதனைக் கீழே வைத்துவிட்டார்.
பின்னர் குண்டு செயலிழக்கும் படையினர் அங்கு வந்து சோதனையிட்ட போது அது கைப்பையொன்றும் அதற்குள் குண்டுகள் எதுவுமிருக்கவில்லையென்பதும் தெரியவரவே பொலிஸார் கைப்பையை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இவ்வேளையில், கைப்பையை பறிகொடுத்த பெண் அவ்விடத்திற்கு வந்து விசாரித்த போது, அது அவரது கைப்பையென்பது தெரியவந்தது. அந்தப் பையை அபகரித்த பிற்பொக்கற்காரன் அதற்குள்ளிருந்தவற்றை எடுத்துக் கொண்டு அதனை வீதியில் வீசியெறிந்துவிட்டுச் சென்றுவிட்டான்.
திருடன் ஒருவனின் செயலால் இரு இடங்களில் குண்டுப் புரளியேற்பட்டு மக்கள் பெரும் அச்சமும் பீதியுமடையும் நிலையேற்பட்டது.