* புது டில்லியில் ஜே.வி.பி. எம்.பி.விஜித ஹேரத்
சிறுபான்மையினங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதன் மூலம் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா மீண்டும் தலையிடுவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், அதிகாரப் பகிர்வு யோசனைக்கு புதுடில்லி ஆதரவளிப்பதானது விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமைவதாகவும் அக்கட்சி சாடியுள்ளது.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற அகில இந்திய பார்வார்ட் பிளக்கின் மாநாட்டில் கலந்துகொண்ட ஜே.வி.பி.யின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான விஜிதஹேரத் எம்.பி. நாடு திரும்புவதற்கு முன் புதுடில்லியில் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியின் போது, அதிகாரப் பகிர்வு தொடர்பான இந்தியாவின் கருத்துக்கள் மறைமுகமாக புலிகளின் கொள்கைக்கு ஆதரவு வழங்குவதாக அமைவதாக கூறியுள்ளார்.
புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் இலங்கை இராணுவத்தைப் புகழ்ந்திருக்கும் விஜிதஹேரத், இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணுமாறு இந்தியாவும் மேற்குலகும் இலங்கை அரசிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருவதையிட்டு விசனம் தெரிவித்திருக்கின்றார்.
எந்தவொரு அரசியல் தீர்வு பற்றி சிந்திப்பதற்கு முன்னர் யுத்தத்தில் புலிகளை தோற்கடிக்க வேண்டுமென கூறியிருக்கும் ஹேரத், இந்தியா கொழும்புக்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்க முடியுமெனவும் அதேசமயம், அரசியல் தீர்வு குறித்து நிர்ப்பந்திப்பதற்கு எந்தவொரு உரிமையும் இல்லையெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
1980களில் தமிழ் போராளிகளுக்கு இந்தியா பயிற்சி வழங்கியதையும் பின்னர் இராணுவ ரீதியில் தலையிட்டதையும் பற்றிக் குறிப்பிட்ட அவர், "தற்போதும் எமது உள்விவகாரங்களில் தலையிட இந்திய அரசாங்கம் முயற்சி செய்கின்றது" என்று கூறியுள்ளார்.
மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டுமென இந்தியா விரும்புகின்றது. 1987 இலங்கை- இந்திய உடன்படிக்கையின் பிரகாரமே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. காணி, பொலிஸ் அதிகாரங்களை இச்சபைகளுக்கு இலங்கை வழங்க வேண்டுமென புதுடில்லி விரும்புவது தலையீடாகும். இந்தியாவின் யோசனை அமுல்படுத்தப்பட்டால் வட, கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பொலிஸ் படையை பயன்படுத்தி தனிநாட்டை அமைக்க முயற்சிக்கக்கூடும் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
அதேசமயம், சில இந்திய அதிகாரிகள் இந்த விடயத்தில் புதுடில்லியிலுள்ள அரசியல்வாதிகளை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடுவதற்கான ஆதாரம் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, இதனை ஊகிப்பதற்கான காரணங்கள் உள்ளதாகவும் அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சியென்ற ரீதியில் இதனை தங்களால் புரிந்துகொள்ள முடியுமென்றும் அதாவது மறைமுக கரமொன்று இதன் பின்னணியில் இருப்பதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டிருக்கிறார்.
்இந்தியா மட்டுமல்ல, எந்தவொரு நாடும் எமது பிரச்சினையில் தலையிடுவதற்கான உரிமை இல்லை. அயல் நாடென்ற முறையில் இலங்கையுடன் இந்தியா கலந்துரையாடுவதையிட்டு எமக்குப் பிரச்சினை இல்லை. இராணுவ ரீதியிலும் கொள்கை ரீதியிலும் புலிகளை தோற்கடிக்க இந்தியா எமக்கு உதவ வேண்டும். அதுவே இந்தியாவின் கடமை என்று விஜிதஹேரத் கூறியுள்ளார்.
அப்படியானால் வெளியாரின் உதவியின்றி புலிகளை தோற்கடிக்க முடியாதென இது அர்த்தப்படுகின்றதா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ்இந்தியாவும் இதர நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளித்தால் புலிகளை இலகுவாக தோற்கடிக்க முடியும். இல்லாவிடில் இது சாத்தியமானாலும் ஏதோ ஒருவிதத்தில் கடினமானதாக மாறிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுமாறு டில்லி தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தால் இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறு கோரப்போவதாக ஜே.வி.பி. விடுத்திருக்கும் அச்சுறுத்தல்கள் பற்றிக் கேட்டபோது, கட்சி அந்த நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லையென அவர் கூறினார். ஆயினும், பகிஷ்கரிப்பு யோசனையை அழுத்தியுரைக்க நாம் விரும்புகின்றோம். மகாத்மா காந்தியிடமிருந்து இதனை நாம் கற்றுக்கொண்டோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.