சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வலுக் குன்றிய பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் தென். ஆபிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளே இடம்பெற்றுள்ளன.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மினி உலகக் கிண்ணமென்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த போட்டி 2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்தது. இதில் அவுஸ்திரேலியா சாம்பியன் கிண்ணத்தை வென்றது.
இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் செப்டெம்பர் மாதம் நடக்கிறது. இந்தப் போட்டியில் ஒருநாள் போட்டி தர வரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் மோதுகின்றன. கடந்த 12 ஆம் திகதி நிலவரப்படி ஒவ்வொரு அணிகளும் பெற்ற தரவரிசையின் அடிப்படையில் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
தரவரிசையில் முதலிடத்திலுள்ள அவுஸ்திரேலியா, 4 ஆவது இடத்திலுள்ள இந்தியா, 5 ஆவது இடத்திலுள்ள பாகிஸ்தான், 8 ஆவது இடத்திலுள்ள மேற்கிந்திய அணிகள் `ஏ' பிரிவிலும், 2 ஆவது இடத்திலுள்ள தென் ஆபிரிக்கா, 3 ஆவது இடத்திலுள்ள நியூஸிலாந்து, 6 ஆவது இடத்திலுள்ள இலங்கை, 7 ஆவது இடத்திலுள்ள இங்கிலாந்து ஆகிய அணிகள் `பி' பிரிவிலும் இடம் பிடித்துள்ளன.
ரவுண்ட் ராபின் லீக் முறையில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இலங்கை அணி இடம்பிடித்துள்ள `பி' பிரிவில் தென். ஆபிரிக்க அணியே வலுவாக உள்ளது. மற்ற இரு அணிகளும் வலுக் குன்றிய அணிகளென்பதால் இலங்கை அணிக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது.
`ஏ' பிரிவில் வலுவான அவுஸ்திரேலியா அணியிருப்பதால் இந்திய அணி தொடக்க சுற்றிலேயே சவாலை சந்திக்க நேரிடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. குண்டு வெடிப்பு சம்பவத்தால் சமீபத்தில் பாகிஸ்தான் பயணத்தை தள்ளி வைத்த அவுஸ்திரேலியா இந்தப் போட்டியில் பங்கேற்குமென்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சாம்பியன் கிண்ண போட்டியில் தரவரிசையில் முதல் எட்டு இடங்களிலுள்ள நாடுகள் மட்டுமே விளையாட முடியும். இதனால் பங்களாதேஷ், அயர்லாந்து மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளன.
போட்டி நடைபெறும் இடங்கள், திகதி குறித்து பின்னர் அறிவிக்கப் படுமென ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டியில் இதற்கு முன்னர் கிண்ணத்தை கைப்பற்றிய நாடுகள் 1998 தென் ஆபிரிக்கா, 2000 நியூஸிலாந்து, 2002 இந்தியா மற்றும் இலங்கை (கூட்டாக கிண்ணத்தை கைப்பற்றின), 2004 மேற்கிந்தியத் தீவுகள், 2006 அவுஸ்திரேலியா.