* புலிகளின் கடும் பதில் தாக்குதலால் நெருக்கடிக்குள் படையினர்
விதுரன்
மடுவை பிடிப்பதற்கான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துவிட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி இந்தப் பாரிய படை நடவடிக்கையில் படையினர் இறங்கியிருந்தனர். ஆனால், மடுவை நெருங்க இன்னும் பல தடைகளைத் தாண்டவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இது படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் முயற்சியென்பதால் இலக்கை அடைய அரசும் படையினரும் அதிக விலை செலுத்த வேண்டியிருக்கும்.
கிழக்கை பாரிய எதிர்ப்பின்றி கைப்பற்றியது போல் வடக்கையும் சுலபமாகக் கைப்பற்றிவிட முடியுமென அரசு கருதியது. இதனால், கடந்த வருட முற்பகுதியில் வடக்கில் பாரிய படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது படையினர் தங்கள் முழுப்பலத்தையும் முழு வளத்தையும் ஒன்றுபடுத்தி வடக்கே பல களமுனைகளை ஒரேநேரத்தில் திறந்து பாரிய படைநகர்வுகளை ஆரம்பித்தனர். எனினும், எந்தக் களமுனையிலும் இதுவரை எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை.
தங்கள் தரப்பு படை பலம் குறித்தும் ஆயுத வளங்கள் குறித்தும் பெரிதாகக் கணக்குப் போட்ட படைத்தரப்பு புலிகளின் படைபலம் குறித்தும் ஆயுத வளங்கள் குறித்தும் தப்புக்கணக்கு போட்டிருந்தது. இதனால் தான் வடபகுதியில் எந்தக் களமுனையிலும் படையினரால் இலகுவாக முன்நகர முடியவில்லை. எங்கு திரும்பினாலும் புலிகளின் கடுமையான பதில் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
வடபகுதி களமுனையைப் பொறுத்தவரை தற்போது படையினருக்கு மன்னார் களமுனையே ஓரளவு வாய்ப்பாக உள்ளது. வவுனியா, மணலாறு மற்றும் யாழ்.குடா களமுனைகள் மிகவும் கடினமானதாகவேயுள்ளன. மணலாறு மற்றும் யாழ்.குடா முன்னரங்க நிலைப் பகுதியில் தினமும் கடும் மோதல்கள் நடைபெறுவது போன்றதொரு தோற்றப்பாட்டை அரசும் படைத்தரப்பும் ஏற்படுத்தினாலும் அங்கு பாரிய படை நகர்வுகளில் படையினர் ஈடுபடுவதில்லை. இந்தக் களமுனைகள் தற்போதைய நிலையில் பாரிய படைநகர்வுகளுக்கு வாய்ப்பற்றிருப்பதனால் புலிகளை இங்கு தற்காப்பு நிலையில் வைத்திருக்க வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டுள்ளது.
மன்னார் களமுனையில் மடுவையும் வடக்கு கரையோரமாக விடத்தல் தீவையும் கைப்பற்றுவதே ஆரம்பத்தில் படையினரின் நோக்கமாயிருந்தது. மடுவை கைப்பற்றுவதன் மூலம் தெற்கில் பெரும் பிரசாரத்தை மேற்கொள்வது அரசின் திட்டமாகும். மடுக் கோவிலுக்குச் செல்ல பிரபாகரனின் அனுமதியை பெற வேண்டிய தேவை விரைவில் நீங்கிவிடுமெனக் கூறியே மடுவைக் கைப்பற்றுவதற்கான பாரிய படைநகர்வை அரசு தொடக்கிவைத்தது.
மடு தேவாலயப் பகுதி தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே உள்ளது. இந்தப் பிரதேசத்தை பிடிப்பது அரசுக்கு அரசியல் ரீதியில் பெரும் வெற்றியாகக் கருதப்படும். இதனால் தான் மடுவை என்ன விலை கொடுத்தாவது கைப்பற்றிவிட வேண்டுமென அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. இதனைக் கைப்பற்றும் வாய்ப்புகள் படையினருக்குமுள்ளது. கடந்த வருட பிற்பகுதியில் அல்லது இவ்வருடம் ஜனவரி மாத முற்பகுதியில் மடுவை படையினர் கைப்பற்றி விடுவரென படைத்தளபதிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால், அது இன்று வரை சாத்தியப்படவில்லை. மடுவை பிடிக்கும் முயற்சியில் படையினர் தொடர்ந்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், அது சாத்தியப்படும் போது படையினர் அதிக விலையையும் நீண்டகாலத்தையும் விரயம் செய்திருக்க வேண்டிய நிலையேற்படும். அந்தளவிற்கு இன்று அந்தக் களமுனை மிகவும் இறுக்கமாயுள்ளது. இதனால், தங்களுக்கு சாதகமானதும் புலிகளுக்கு வாய்ப்பற்றதுமானதொரு களமுனையில் முன்நகர்வை மேற்கொண்டு விட படையினர் பெரிதும் முயற்சிக்கின்றனர். எனினும், அது விரைவில் சாத்தியப்படுவதாகத் தென்படவில்லை.
பண்டிவிரிச்சான் பகுதியில் தற்போது நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து நேராகச் சென்றால் மடுவை அடைந்துவிட முடியும். ஆனால், அது சாத்தியப்படாதென்பதால் காட்டுப் பகுதிகளூடாக முள்ளிக்குளம் சென்று அங்கிருந்து கீரிசுட்டான் சென்று பின் கரம்பைக்குளம் ஊடாக மடுவை நோக்கிச் சென்று விட படையினர் முயற்சிக்கின்றனர். இது நீண்ட நாட்களை எடுப்பதுடன் படையினருக்கு பலத்த சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
ஆரம்பத்தில் வடக்கே படை நகர்வை ஆரம்பித்தபோது மடுவையும் விடத்தல்தீவையும் கைப்பற்றுவதே படையினரின் பிரதான நோக்கமாயிருந்தது. மன்னார் - பூநகரி வீதியில் கரையோரப் பகுதியாக விடத்தல்தீவு உள்ளது. இதுவே தற்போது மேற்கு கரையில் கடற்புலிகளின் பிரதான தளமாகவும் பிரதான கடல்வழி விநியோக மையமாகவும் இருப்பதாக படையினர் கருதுகின்றனர். விடத்தல்தீவிற்கு தெற்கிலிருந்தே புலிகள் மன்னாருக்கு ஆட்லறி ஷெல் தாக்குல்களை நடத்தி வருவதால் விடத்தல்தீவை கைப்பற்றிவிட்டால் மன்னாரின் பாதுகாப்பை உறுதிப்படுத்திவிடலாமெனக் கருதினர்.
எனினும், மன்னாருக்கு வடக்கே கரையோரமாக பூநகரி வீதியால் நகரும் முயற்சிகள் சாத்தியப்படாது போனதாலும் விடத்தல்தீவு நீண்ட தூரத்திலிருப்பதாலும் விடத்தல்தீவை கைப்பற்றும் முயற்சியை கைவிட்ட படையினர் அதே வீதியிலிருக்கும் அடம்பனைக் கைப்பற்றிவிட வேண்டுமென முயற்சிக்கின்றனர். தற்போதைய நிலையில் மடுவையும் அடம்பனையும் கைபற்றுவதே படையினரின் மிக முக்கிய நோக்கமாயுள்ளது.
மடுவைக் கைப்பற்றுவதில் படையினர் எவ்வாறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனரோ அதேபோன்ற சிக்கல் தான் அடம்பனைக் கைப்பற்றும் முயற்சியிலும் படையினர் எதிர்கொள்கின்றனர். பாலைக்குழி பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் வடக்கே நேராக முன்நகர்ந்து சென்றால் அடம்பனைப் பிடித்துவிடலாம். ஆனால், அது சாத்தியப்படாத நிலையில் பக்கவாட்டில் கிழக்குப் பக்கமாக ஆண்டான்குளத்திற்கு முன்நகர்ந்து அதன் பின் அங்கிருந்து அடம்பனுக்குச் செல்ல முயற்சிக்கின்றனர்.
மன்னாருக்கு வடக்கே, கரையோரமாக திருக்கேதீஸ்வரம், மாந்தை உள்ளன. இப்பகுதியூடாக மேலும் வடக்கே முன்னேறி சேத்துக்குளத்திற்குச் சென்று அங்கிருந்து பாப்பாமோட்டைக்குச் சென்றுவிட்டால் அதற்கப்பால் பாரிய வெளிகளைக் கொண்ட பிரதேசங்களே உள்ளன. அத்துடன் பாப்பாமோட்டையில் பிரதான வீதிகள் பலவும் சந்திப்பதால் படையினருக்கான பின்தளமும் விநியோகப் பாதையுமிருப்பதுடன் பாப்பாமோட்டைக்கு அப்பாலுள்ள பாரிய வெளியை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்லறி ஷெல்கள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் அப்பாலுள்ள பிரதேசத்தை கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியுமென படைத்தரப்பு நம்புகிறது.
மடுவை நோக்கியும் அடம்பனை நோக்கியும் கடந்தவாரம் படையினர் மிகப் பெருமெடுப்பில் ஒரே நேரத்தில் பாரிய படைநகர்வுகளை அடுத்தடுத்து தொடர்ந்து மேற்கொண்டிருந்தனர். எனினும், புலிகள் ஆட்லறி ஷெல்களை மழைபோல் பொழிந்து படையினருக்கு மிகப்பெரும் சேதங்களை ஏற்படுத்தி படையினரின் முன்நகர்வு முயற்சிகளை முறியடித்துவிட்டனர். இது படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் முறியடிப்புச் சமர்களில் பெரும் எண்ணிக்கையில் ஆட்லறி ஷெல்களை பயன்படுத்துவது படையினருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் வசம் ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் மிகவும் தாராளமாயிருப்பது எப்படியென்ற கேள்வியும் படையினர் மத்தியில் எழுந்துள்ளது.
புலிகள் எங்கிருந்து ஷெல்களையும் மோட்டார் குண்டுகளையும் தருவிக்கிறார்களென்ற கேள்வியும் எழுவதுடன், புலிகள் வசமிருக்கும் ஆட்லறிகளின் எண்ணிக்கை குறித்தும் அவர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் தகவல்படி அவர்களிடம் 120 மில்லிமீற்றர் ஆட்லறிகள் குறைந்தது எண்பது உள்ளது. 122 மி.மீ. ஆட்லறிகள் இருபதும், 130 மி.மீ. ஆட்லறிகள் ஐந்தும் உள்ளன.
130 மி.மீ ஆட்லறிகளைப் பொறுத்தவரை அவற்றைப் புலிகள் பூநகரி, வவுனியா, மன்னார் மற்றும் மணலாறில் வைத்திருப்பதாக படையினர் கருதுகின்றனர். வடபகுதி களமுனைகளில் தினமும் புலிகள் மேற்கொள்ளும் ஆட்லறி ஷெல் தாக்குதல்களின் அடிப்படையிலேயே புலிகள் வசம் இந்தளவிற்கு ஆட்லறிகள் உண்டென்பதை புலனாய்வுப் பிரிவினர் கணக்கிட்டுள்ளனர். எனினும், புலிகளிடம் 152 மி.மீற்றர் ஆட்லறிகள் எத்தனை உண்டென்பதை படையினரால் சரியாக அறிந்துகொள்ள முடியவில்லை.
அண்மைக் காலத்தில் மன்னார் களமுனையில் புலிகள் 152 மி.மீ ஆட்லறியை பயன்படுத்துவதை அறிந்துள்ளனர். பூநகரியிலும் இதனை அவர்கள் பயன்படுத்துகின்றனர். கிழக்கில் முன்னர் திருகோணமலை துறைமுகம் மீது மூதூர் கிழக்கு சம்பூர் பகுதியிலிருந்து புலிகள் 152 மி.மீ. ஆட்லறி ஷெல்லையே ஏவியிருந்தனர். இதனால், புலிகள் வசம் மூன்றுக்கும் மேற்பட்ட 152 மி.மீ ஆட்லறிகளிருப்பது உறுதியானதென்றும் படைத்தரப்புத் தகவல்கள் கூறினாலும் அவர்கள், பயன்படுத்தாத நிலையில் மேலும் சில 152 மி.மீ ஆட்லறிகளை வைத்திருக்கக்கூடுமென படையினர் கருதுகின்றனர்.
வடக்கே படையினர் பெருமெடுப்பில் பாரிய முன்நகர்வை மேற்கொள்ளும் போது அந்த முன்நகர்வு, முயற்சி இடம்பெறும் பகுதிகளைத் துல்லியமாகக் கணித்து ஒரே நேரத்தில் புலிகள் பல ஆட்லறிகளைப் பயன்படுத்தி ஷெல்களை மழைபோல் பொழிவதால் படையினர் பேரிழப்புக்களை சந்திப்பதுடன் இவ்வாறான பாரிய படைநகர்வுகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலையேற்படுகிறது. கடந்தவாரம் கூட சேத்துக்குளம் பகுதியில் பாரிய படைநகர்வு மேற்கொள்ளப்பட்ட போது புலிகள் ஷெல் மழை பொழிந்து படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி அந்தப் படை நகர்வுகளை முறியடித்தனர்.
வடக்கே கடந்த ஒரு வாரமாக கடும் மழை பொழிகிறது. கடும் மழை படையினரின் பாரிய படைநகர்வை வெகுவாகப் பாதிக்கிறது. பலத்த மழை புலிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் படையினருக்கே கூடிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன்னார் களமுனையில் பிரதான வீதிகளெல்லாம் புலிகள் வசமேயுள்ளன. இதனால், வீதிகளை விட்டு தரைநிலத்தூடாகவே பாரிய படை நகர்வு இடம்பெறுகிறது. டாங்கிகள், கவச வாகனங்கள் வீதிகளை விட்டு தரையில் இறங்கும் போது பலத்த மழையால் சேறுகள், சகதிகளுக்குள் சிக்கி விடுகின்றன. இது பாரிய படை நடவடிக்கைகளை வெகுவாகப் பாதித்து விடுகின்றது. விநியோகப் பாதைகளும் அடைபட்டு விடுகின்றன.
மன்னார் களமுனையிலேயே தற்போது படையினரின் தாக்குதல் படையணிகள் நிலைகொண்டுள்ளன. அடம்பன் நோக்கிய முன்நகர்வு முயற்சியில் 58 ஆவது படையணியும் மடுவை நோக்கிய முன்நகர்வு முயற்சியில் 57 ஆவது படையணியும் இறங்கியுள்ளன. இந்தப் படையணிகள் அண்மைக் காலமாக பலத்த இழப்புக்களை சந்தித்து வருகின்றன. கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில், படையினரின் தகவல்படி இங்கு 172 படையினர் கொல்லப்பட்டும் 1,300 படையினர் படுகாயமடைந்துமுள்ளனர். இதன்படி 1,472 தாக்குதல் படையினர் களமுனையிலிருந்து குறிப்பிட்ட காலத்தில் அகற்றப்பட்டுள்ளனர்.
இது, கெரில்லா பாணியில் தற்காப்புச் சமரில் ஈடுபடும் புலிகளுக்கெதிரான போரில் மிகப்பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது. வடக்கில் மன்னார் களமுனையிலிருந்தே குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அதிகளவு படையினர் அகற்றப்பட்டுள்ளனர். இது ஏனைய படையினரின் மனோநிலையை பெரிதும் பாதித்துள்ளதுடன் சேத்துக்குளம் நோக்கிய படைநகர்வுக்காக புதிய படையணியொன்று அங்கு புதிதாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு படையினர் அதிகளவு இழப்புக்களைச் சந்தித்து களமுனையிலிருந்து அகற்றப்பட்டு வருவதையே இது காட்டுகிறது.
படையினரின் பாரிய படைநகர்வுகளுக்கெதிரான முறியடிப்புச் சமரில் புலிகள் ஆட்லறிகளையும் மோட்டார்களையும் மிகச் செறிவாகப் பயன்படுத்துகையில் மன்னார் களமுனையில் சிறுசிறு குழுக்களாகவும் அதிக எண்ணிக்கையுடன் பெரும் குழுக்களாகவும் முன்நகரும், ஊடுருவும் படையினர் புலிகளின் தந்திரத் தாக்குதல்களுக்குள் அதிகளவில் சிக்குகின்றனர். கண்ணிவெடிகள், மிதிவெடிகள், பொறிவெடிகளென்பன முன்நகரும் படையினருக்கும் ஊடுருவும் படையினருக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதைவிட புலிகளின் சினைப்பர் தாக்குதல் அணிகள் படையினருக்கு சிம்மசொப்பனமாயுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (14 ஆம் திகதி) வவுனியா சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிப் போர்முனைத் தளபதிகளைச் சந்தித்து கள நிலைகுறித்து விரிவாக ஆராய்ந்தார். இதன்போது களமுனையில் படையினர் கண்ணிவெடிகள், மிதிவெடிகள், பொறி வெடிகளாலும் ஏனைய வெடி பொருட்களாலும் பெரும் நெருக்கடிகளைச் சந்திப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்தளவிற்கு படையினர் புலிகளின் தந்திரத் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
அடம்பனை நோக்கி முன்நகரும் படையினருக்கு மன்னார் - பூநகரி கī