லண்டன் ஹீத்துரு விமான நிலையத்தினுள் நேற்று சனிக்கிழமை மாலை அத்துமீறி நுழைந்த இலங்கைத் தமிழ் இளைஞனொருவர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தினுள் விமானமொன்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்ததாகக் கூறியே இலங்கைத் தமிழரெனக் கருதப்படும் கேதீஸ்வரன் உதயகுமார் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டதாக லண்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹீத்துரு விமான நிலையத்தின் பாதுகாப்பு வேலியை இவர் கடந்து வந்த போதே கைது செய்யப்பட்டதாக, விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கமாண்டோ படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இவர் தீவிர விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் கைது செய்யப்பட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அதேநேரம், இவர் அங்கு திடீரென நுழைந்ததால் விமான சேவைகளிலும் சிறிது நேரம் பாதிப்புகள் ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஹீத்துரு விமான நிலையம், ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்த நிலையில், அங்கு இந்த இளைஞர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை லண்டன் பொலிஸார் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.