* இருதரப்புக்கும் அதிக இழப்புகள்
மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் நேற்று முன்தினம் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்ற கடும் மோதல்களில் பலத்த உயிர்ச் சேதமேற்பட்டுள்ளதாக பரஸ்பரம் இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் பத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதேநேரம், இவ்விரு பகுதிகளிலும் படையினரின் முன்னகர்வு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதில் 22 படையினர் கொல்லப்பட்டும் பெருமளவானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மணலாறில் நிக்கவெவ, ஜனகபுர மற்றும் கிரிப்பன்வெவ பகுதிகளில் வெள்ளிக்கிழமை கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதன் போது விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் பலவும் முன்னரங்க காவல் நிலைகள் பலவும் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த மோதல்களில் படையினர் தரப்பில் மூன்று படையினர் கொல்லப்பட்டும் எட்டுப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் போது புலிகள் வசமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் இராணுவப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி புலிகள் கூறுகையில்;
மணலாறு கொக்குத்தொடுவாய் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை தாங்கள் முறியடித்ததில் 15 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
கடும் ஷெல் தாக்குதலை நடத்தியவாறு முன்னேற முயன்ற படையினர் மீது கடுமையான பதில் தாக்குதலை நடத்தி அவர்களை பழைய நிலைக்கு பலத்த இழப்புகளுடன் திருப்பியனுப்பினர்.
இதன் போது ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்தனர்.
மன்னாரில்....
மன்னாரில் வெள்ளிக்கிழமை அடம்பனுக்குத் தெற்கேயும் பரப்பாங்கண்டல் மற்றும் கீரிசுட்டான் பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இங்கும் புலிகள் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளதாக படையினர் கூறுகின்றனர்.
இங்கு நடைபெற்ற மோதல்களில் இரு படையினர் காயமடைந்ததாகவும் படையினர் கூறுகின்றனர்.
எனினும், மன்னாரில் பரப்பாங்கண்டல், சேத்துக்குளம் பகுதியூடாக முன்னகர்வை மேற்கொண்ட படையினர் மீது தாங்கள் நடத்திய கடும் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டும் 7 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், மடுவைக் கைப்பற்றும் நோக்கில் கீரிசுட்டான் பகுதியிலிருந்து மற்றொரு படை நகர்வு மேற்கொள்ளப்பட்ட போது அதற்கெதிராக நடத்தப்பட்ட கடும் பதில் தாக்குதலில் 5 படையினர் கொல்லப்பட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.