பாகிஸ்தானின் புதிய அரசில் பாதுகாப்பு அமைச்சர் பதவியைத் தங்கள் கட்சிக்குத் தர வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியும் நவாஸ் ஷரீப் கட்சியும் இணைந்து பாகிஸ்தானில் அரசு அமைக்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் முக்கியமான அமைச்சர் பதவியை யார் பெறுவது என்று இரு கட்சிகளிடையேயும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தேசிய சபைக் கூட்டம் வரும் 17 ஆம் திகதி நடைபெறுகிறது. அப்போது அமைச்சர்கள் பதவி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவிகளில் 54 சதவீதம் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், 40 சதவீதம் நவாஸ் ஷரீப் கட்சிக்கும் ஒதுக்குவது என்று இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
முக்கிய பதவிகளைப் பெறுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.