பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் மோசடி வழக்குகள் அனைத்தையும் பாகிஸ்தான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதேவேளை, அவர் மீதான ஊழல் வழக்குகளைக் கைவிடுமாறும் சுவிற்சர்லாந்து அரசுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானில் இருமுறை பிரதமராகப் பதவி வகித்தவர். இரண்டாவது முறை பிரதமராக இருந்தபோது ஆயுத பேரத்தில் கோடிக்கணக்கான ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகவும் அதில் 288 கோடி ரூபாவை சுவிற்சர்லாந்து நாட்டு வங்கியில் போட்டிருப்பதாகவும் பாகிஸ்தானின் ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1998 இல் இந்த வழக்கு தொடர்பாக சர்தாரி கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இருவர் மீதும் மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவரும் நடவடிக்கைகளில் பெனாசீர் பூட்டோ தீவிரம் காட்டியபோது, அவர் பிரிட்டனில் அரசியல் தஞ்சம் பெற்றிருந்தார்.
அவருக்கும் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்புக்கும் இடையே இடைத்தரகர்கள் மூலம் இரகசிய உடன்பாடு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் பெனாசிர் மீதான ஊழல் புகார் வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று உறுதி கூறப்பட்டது. அதன்படியே பெனாசிர் நாடு திரும்பினார். ஆனால், பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் அவர் மரணம் அடைந்தார்.
ஆசிப் அலி சர்தாரி 8 ஆண்டுகள் சிறையில் இருந்தபோதும், அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அப்போது அரசுக்கு பெனாசிருக்கும் ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் சர்தாரி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஊழல் வழக்குகளில் சிக்கியிருந்தாலும் இவ்விரு பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்கள் மன்னிக்க கடந்த அக்டோபர் மாதம் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றை முஷாரப் கொண்டுவந்தார். பெனாசீர் பூட்டோ, சர்தாரி மீதான வழக்குகள் அனைத்தையும் கைவிடுமாறு சுவிற்சர்லாந்து அரசுக்கு பாகிஸ்தான் அரசு அதையொட்டியே இப்போது கடிதம் எழுதி அறிவுறுத்தியிருக்கிறது.
இதேபோல, சிந்து மாகாண உயர்நீதிமன்றமும் பிரிட்டன் மற்றும் சுவிற்சர்லாந்து நாடுகளுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் பெனாசிர், சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை முடிக்காமல் தொடர்ந்து நடத்தினால் நீதிமன்ற அவமதிப்புக்காக நடவடிக்கை எடுக்க நேரிடம் என்று எச்சரித்திருக்கிறது.