* இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை
தேசிய சம்பள ஆணைக்குழு முன்மொழிந்துள்ள புதிய சம்பளத் திட்டத்தை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முற்றாக நிராகரிக்கத் தீர்மானித்துள்ளன.
கல்வியமைச்சு, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய சம்பள ஆணைக்குழு ஆகியவற்றுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போதே, புதிய சம்பளத் திட்டத்தை நிராகரிப்பதென தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் கூறுகையில;
"அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஆசிரியர் சங்கங்கள் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தன. இதன்போது சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் புதிய திட்டம் வகுக்கப்பட்டு, அது உடன் வெளியிடப்படுமெனவும் அவர் கூறினார்.
அதன்படி சம்பள ஆணைக்குழு புதிய சம்பளத் திட்டத்தை வெளியிட்டது. அதனை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றுசேர்ந்து பரிசீலித்தன. எனினும் அதிபர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யவில்லை.
எனவே, புதிய சம்பளத்திட்டத்தை ஒன்றுபட்டு நிராகரிப்பதென ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. எமது தீர்மானத்தை இன்று கல்வியமைச்சிற்கும் தேசிய சம்பள ஆணைக்குழுவிற்கும் உத்தியோக பூர்வமாக அறிவிப்போம்.
இந்த அரசாங்கத்திற்கும் கல்வியமைச்சிற்கும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் நோக்கமில்லை. சம்பள முரண்பாடும் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாமலுள்ளது. காலத்தை இழுத்தடித்து ஏமாற்றுவதிலேயே இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் அதிபர், ஆசிரியர் ஏற்கும் நியாயமான சம்பளத் திட்டத்தை உரிய தரப்பினர் உடனடியாக முன்வைக்க வேண்டுமென்பதே எமது வலியுறுத்தலாகும்" என்றார்.