கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக கடும் மழை பெய்து வரும் அதே நேரம் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கடும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மட்டக்களப்பில்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழைகாரணமாக தாழ்நிலப் பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளிலும் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. மன்னம்பிட்டி பாலத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும், பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பயணங்களை மேற்கொள்ள முடியாது பொதுமக்கள் அவதியுறுகின்றனர். சிறிய ரகவாகனங்களை பாலத்தினூடாக செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
பெரு வெள்ளத்தினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் தொற்று நோய்கள் பரவும் ஆபத்தும் காணப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மூன்று நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் பரவலாக இரவு பகலாக கடும் மழை பெய்து வருகிறது.
தென்எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவும், போரதீவுப்பற்று பிரதேச பிரிவும் வெள்ளத்தால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மூங்கிலாறு பாலத்தில் மூன்றரை அடிக்குமேல் நீர்பாய்ந்து செல்வதால் போக்குவரத்துதுண்டிக்கப்பட்டு தோணிகள், வள்ளங்கள் மூலமே தமது பயணங்களை அச்சத்துடன் தொடர வேண்டியநிலை தோன்றியுள்ளது.
மாவட்டத்திலுள்ள பெருமளவான பாட சாலைக் காணிகளுக்குள்ளும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
சில பாடசாலைகளை இன்று திங்கட்கிழமை திறந்து நடாத்த முடியாதவாறு வகுப்பறைகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளதாக பாட சாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இம் மாவட்டப் பாடசாலைகளில் அடுத்த வாரம் முதலாந் தவணைப் பரீட்சையினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருக்கும் தருணத்திலேயே தொடர் மழை பெய்து கொண்டிருக்கின்றது. இதனால் பரீட்சைகளை நடத்துவதிலும் தடங்கல்கள் ஏற்படக்கூடுமென அஞ்சப்படுகிறது.
வெள்ளம் காரணமாக இப் பிரதேசத்திலுள்ள மலசல கூடங்கள் பலவும் நிறைந்து வீதிகளிலும், வீட்டு முற்றங்களிலும் அசுத்த நீர் பரவி ஓடுகின்றன. இதனால் பல இடங்களில் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரியங்களும் ஏற்பட்டிருப்பதாக புகார்கள் வந்தவண்ணமிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் இடைவிடா அடை மழைகாரணமாக பெரும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் அவலங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக மாவட்டத்தின் கரையோரப் பிர தேசங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளம் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இக்கிராமங்களின் உள்ளூர் வீதிகளெங்கும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன.
நிந்தவூர், காரைதீவு, மாளிகைக் காடு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக் குடியிருப்பு, துரவந்தியமேடு, மணற் சேனை, உட்பட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பல கிராமங்களும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
நிந்தவூரில் மத்திய வடிச்சல் வாய்க்கால் பெருக்கெடுத்துள்ளதால் அதன் இரு மருங்கிலுமுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் பெரும் அவலத்திற்குள்ளாகினர்.
நிந்தவூர் பிரதேசசபைத்தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் (அஷ்ரப்), பிரதி தவிசாளர் ஏ.எல்.எம்.சாலிஹு உட்பட உறுப்பினர்கள் பலரும் வெள்ள நீரை வடிந்தோடச் செய்யும் நடவடிக்கையில் இரவு, பகலாக ஈடுபட்டனர்.
இதேவேளை கல்முனை மாநகரசபைப் பிரிவுக்குட்பட்ட தமிழ், முஸ்லிம் கிராமங்களில் ஏற்பட்ட வெள்ள நீரை கடலுக்கு வடிந்தோடச் செய்யும் நடவடிக்கைகளில் மாநகர மேயர் ஏ.ஆர்.அஜ்மீர், எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் உட்பட உறுப்பினர்களும் நேற்று நேரில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் நேற்று ஞாயிறு காலை 8.30 மணிவரை அம்பாறை மாவட்டத்தில் 112.4 மில்லி மீற்றர் மழை பெய்ததாக பொத்துவில் வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.சாலிஹீன் தெரிவித்தார்.
இம் மாதம் முதலாம் திகதி முதல் நேற்று 16 ஆம் திகதி வரை 210.9 மில்லி மீற்றர் மழை மாவட்டத்தில் பெய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 16 ஆம் திகதி வரை 833.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும் சாலிஹீன் மேலும் தெரிவித்தார்.
நிந்தவூர்ப்பிரதேசத்தில் பெரும் போக நெற்செய்கை மேற்கொண்டு அறுவடைக்குத் தயாரான நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்காணிகள் மழை வெள்ளத்தால் பெருநாசமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் சில பாடசாலைக் கட்டிடங்களிலும் நீர் பரவிக் காணப்படுவதால் சில பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாதுள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வருடத்தின் முதலாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பிக்கும் தறுவாயில் இவ்வாறான நிலமை ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையில்...
திருகோணமலையில் அடைமழை தொடர்ந்து பெய்கிறது. சனிக்கிழமை மாலை மீண்டும் ஆரம்பமான மழை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடர்கிறது. நகரின் புறநகர்ப் பிரதேசங்களில் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கின. மூதூர், தம்பலகாமம், கந்தளாய், கிண்ணியா, பன்குளம் பகுதிகளிலும் கடும் மழை பெய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.