கொழும்பு மாநாகரப் பகுதிகளிலும் புறநகர்ப்பகுதிகளிலும் அண்மைக் காலமாக பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு மேற்படி தெற்குப் பிரதேசங்களில் பரவலாக இயங்கிவரும் பாதாளக் கோஷ்டியினருடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் தெற்கில் தாக்குதல்களை நடத்துவதற்குத் தேவையான தகவல்களையும் உதவிகளையும் குறித்த பாதாளக் கோஷ்டியினரே வழங்கியுள்ளனர் என மேலும் புலனாய்வுப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்புப் பிரதேசங்களில் விசேட பொலிஸ் நடவடிக்கைகளின் போதும், தேடுதல் நடவடிக்கைகளின் போதும் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத்தைச் சேர்ந்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களிடம் பொலிஸ் புலனாய்வுக் குழுவினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போதே, இவ்வாறு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் பாதாளக் கோஷ்டியினருக்கு இருந்து வந்த நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகியதாகவும் மேலும் தெரிவித்துள்ளது. மேற்படி கைது செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க உயர்மட்டத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் புறக்கோட்டை, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை மற்றும் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் என விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பாதாளக் குழுவினர் பற்றி பொலிஸ் புலனாய்வு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப, கொழும்பு முகத்துவாரம் பகுதிகளில் இயங்கிவரும் பாதாளக் குழுவினரும் மற்றும் மருதானை மாளிகாவத்தையில் இயங்கும் பாதாளக்குழுவினரும் கொழும்பில் ஊடுருவியுள்ள புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாகவும் புலனாய்வு தரப்பில் இந்தத் தகவல்கள் மிக முக்கியமாகக் கருதப்படுவதாகவும், மேற்படி தகவல்களின் அடிப்படையில் தீவிர மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் பெரும் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்காகப் புகுந்துள்ளதாகவும், இவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பாதாளக் கோஷ்டியினர் பலருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் உதவியுடன் தங்குமிட வசதிகள், போக்குவரத்து வசதிகளைப் பெற்றுள்ளார்கள். இவ்வாறு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் பாதாளக்கோஷ்டியினர் கொடுத்த குறிப்பிட்ட இடங்களில் தங்கியிருந்துகொண்டு, தாக்குதலுக்குத் தேவையான குண்டுகளை ஆயுதங்களைத் தயார்படுத்தியுள்ளனர் எனவும் பின்னர், அவற்றை பாதாளக்கோஷ்டியினர் கொடுக்கும் போக்குவரத்து வாகன வசதிகளைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்துவதற்காகக் குறிப்பிட்ட பகுதிகளுக்குக் கடத்தி சென்றுள்ளனர் எனவும் விசாரணைகள் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாதாளக் கோஷ்டியினர் புலிகள் இயக்க பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதற்கு மற்றுமொரு காரணம் அவர்கள் செய்துவரும் போதைவஸ்து மற்றும் ஆயுதங்கள் கடத்தல்களும் வியாபாரமும் ஆகும். புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் சர்வதேச ரீதியில் ஆயுதங்கள், போதைவஸ்துகள் கடத்தல்களைச் செய்து வருவதால் பாதாளக் கோஷ்டிகள் இந்தக் கடத்தல் வியாபாரங்களுக்காகப் புலிகள் இயக்கத்தினரின் ஒத்தாசைகளையும் பணஉதவிகளையும் பாதாளக்குழுவினர் பெற்று வருகின்றனர் எனவும், இவ்வாறு புலிகளிடம் பெறும் உதவிகளுக்குப் பதிலாக கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புலிகள் இயக்கத்தினர் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தேவையான தகவல்கள், தங்குமிடம், போக்குவரத்து மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் எனவும் புலனாய்வுத் தரப்பு தெரிவித்துள்ளது.
மேற்படி கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் வெளியாகும் பட்சத்தில், பாதாளக்கோஷ்டியினரும் புலிகள் இயக்கத்தினரும் தலைமறைவாகி வருவதாலும் வேறு இடங்களுக்கு ஓடிவிடுவதாலும் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு எச்சரிக்கையாகிவிடுவதாலும் தொடர்ந்து இதுபற்றி விசாரணைகளைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனப் பாதுகாப்பு புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மேற்படி கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள், அதற்காக உதவிகளைச் செய்து நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் பாதாளக் கோஷ்டியினர் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பாதுகாப்புப் புலனாய்வுத்துறை வெளியிடாது இரகசியமாகவே வைத்திருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவயின : 13.03.2008