கிரிக்கெட் போட்டிகளில் துறவிபோல் செயல்பட முடியாதென்று அவுஸ்திரேலியா முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிந்து திரும்பிய ஹர்பஜன்சிங் அளித்த ஒருபேட்டியில்,கில்கிறிஸ்ட் ஒன்றும் துறவி யல்ல என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் டெல்லியில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,
பஞ்சாப்பை சேர்ந்த ஒரு சுழற்பந்து வீச்சாளர்,நான் துறவியல்ல என்று தெரிவித்திருந்தார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் துறவிகள் யாரும்இல்லை. நானும் துறவி போலிருக்க நினைத்ததுமில்லை. டெஸ்ட் தொடர்கள் கடும் போட்டி நிறைந்ததாகும். அதில் அதிக ஆர்வம் மற்றும் உணர்ச்சிகள் இருக்கத் தான் செய்யும்.
வீரர்கள் எல்லை மீறி நடக்காமலிருந்தால்நல்லதாகும். வீரர்களின் வழக்கமான ஆக்ரோஷத்தை தடுக்க நிர்வாகத்தினர் முயற்சி செய்யக்கூடாது.2001 ஆம் ஆண்டு இந்தியா - அவுஸ்திரேலியா இடையே நடந்த போட்டித் தொடர் அதிக மக்களை கவர்ந்தது. அதேபோல் தற்போது நடந்த போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரும் அதிக எதிர்பார்ப்பு நிறைந்ததாக இருந்தது. இந்தத் தொடரில் நாங்கள் கடின சவால்களையும் கடினமான போராட்டத்தையும் சந்தித்தோம்.
இந்திய அணியின் சமீபத்திய சுற்றுப்பயணத்தில் ஆக்ரோஷமும் கடினமும் அதிகமிருந்தது. சில வீரர்கள் எல்லை மீறி நடந்து கொண்டனர். இதனால் ஆட்டத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இருப்பினும் வீரர்கள் ஒருவருக்கொருவர் நல்ல மரியாதை கொண்டுள்ளனர்.
உதாரணமாக ஷ்ரீசாந்த் முன்பை விட தனது நடத்தையை தற்போது நன்றாக மாற்றிக் கொண்டுள்ளார். தனது தவறிலிருந்து அவர் பாடம் கற்றுக் கொண்டுள்ளார்.
2001ஆம் ஆண்டில் மும்பையிலும்,2004 ஆம் ஆண்டில் பெங்ளூரிலும் நான் அடித்த சதங்கள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாகும். வீரர்கள் பேசுவதை விடுத்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று கும்பிளே கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அணி வீரர்களின் நடவடிக்கைக்கு கப்டன் தான் பொறுப்பாவார். 2005 ஆம் ஆண்டு ஆசஷ் தொடர்தோல்விக்குப் பின் பொண்டிங் கப்டன் பொறுப்பில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளார்.18 வருடங்களாக நாங்கள் வெற்றி பெற்று வந்தோம்.ஆனால் தற்போது இந்தியாவிடம் தோல்வி கண்டு சரிவை சந்தித்திருக்கிறோமென்றார்.