டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணியை வீழ்த்துவது தங்கள் முக்கிய குறிக்கோள் என்று தென்னாபிரிக்க அணிப் பயிற்சியாளர் மைக்கே ஆர்தர் தெரிவித்துள்ளார்.
ஸ்மித் தலைமையிலான தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் 26 ஆம் திகதி தொடங்குகிறது.
பங்களாதேஷுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை 3-0 என்று வென்று ஒருநாள் போட்டித் தரவரிசையில் அவுஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி விட்டு முதலிடம் பிடித்த தென்னாபிரிக்க அணி 21 ஆம் திகதி சென்னை வருகிறது. இந்தநிலையில், தென்னாபிரிக்க அணி பயிற்சியாளர் மைக்கே ஆர்தர் டாக்காவில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது;
"எங்கள் அணிக்கு நாங்கள் வைத்திருந்த குறிக்கோள்களில் ஒன்றை எட்டியுள்ளோம். ஒரு நாள் போட்டித் தர வரிசையில் முதலிடத்தை பிடித்தது மிகவும் சிறப்பானதாகும். அடுத்த ஆண்டிலும் நாங்கள் முதல் நிலை அணியாக விளங்கினால் இன்னும் நன்றாக இருக்கும். ஏனெனில், முதலிடத்தில் நீடிக்க வேண்டுமென்றால் நாங்கள் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 தொடரை வெல்ல வேண்டும்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் நாங்கள் அந்த அணியை வீழ்த்தி தொடரை வெல்வோம். பங்களாதேஷுக்கு எதிரான தொடரை நாங்கள் வென்றிருப்பது இந்தியத் தொடருக்கு ஒரு இனிமையான அனுபவமாகும். பங்களாதேஷுடனான தொடரை இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு தயாராகும் களம் என்றே நாங்கள் எப்போதும் கருதுகிறோம்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சிறப்பானதாகும் .பெரிய அணியான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினால் அருமையானதாக அமையும். நாங்கள் இந்தத் தொடருக்கு சாதாரண அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராவது போல் தயாராகவில்லை.
இந்தியாவுக்குச் சென்று அதிக அணிகள் வெற்றி ஈட்டியதில்லை. எனவே, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டுமென்பதே எங்கள் அணியின் இந்த ஆண்டுக்கான முக்கிய குறிக்கோளாகும்.
இனவெறிக் கொள்கை காரணமாக இந்திய அணிக்கு எதிரான தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் இடம் கிடைக்காத நெல் முக்கிய வீரர். அவர் அணியில் தொடர்ந்துமிருப்பார் என்று நம்புகிறேன். இருப்பினும் அவருக்கு எது? சிறந்தது என்பதை அவர் தான் முடிவு செய்ய முடியும் "என்றார்.