Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
உணவில் கலப்படம் உடலைப் பாதிக்கும் அறிவுப் பொருளில் கலப்படம் ஆன்மாவைப் பாதிக்கும்
[18 - March - 2008] [Font Size - A - A - A]
* எழுத்துக்கும் கற்புத் தேவை

தி.இராசகோபாலன்

பிறப்பில் கலப்படம் இருக்கலாம். ஆனால், படைப்பில் கலப்படம் இருக்கக்கூடாது. பிறப்பில் ஏற்படும் கலப்படத்தால் பாதிக்கப்படுபவர்கள் தனிமனிதர்களே தவிர சமூகம் இல்லை. ஆனால், படைப்பில் ஏற்படும் கலப்படத்தால் தலைமுறைச் சிந்தனையே பாதிக்கப்படும். சிருஷ்டி ஆன்மாவின் வெளிப்பாடு. ஆன்மாவின் வெளிப்பாட்டிலே பிறக்கும் இலக்கியங்கள் சாகாவரம் பெற்றவை. அதிலேயும் கலப்படம் என்பதைக் கேட்கும்போது அறிவு ஜீவிகள் வெட்கத்தால் புழுங்குவதைத் தவிர வேறு வழி ஏது? அண்மையில் வேங்கடவன் பல்கலைக்கழகத்து வேதியியல் பேராசிரியர் ஒருவர் செய்த ஆய்வுத் திருட்டை நெதர்லாந்து நாட்டின் `எல்செல்வியர் குழுமம்' அகில உலகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. எழுபது ஆய்வுக் கட்டுரைகளுக்குச் சொந்தக்காரர் என உருமை கொண்டாடும் அப்பேராசிரியர் ஏற்கனவே ஜப்பானிய இதழ்களில் பிரசுரமான கட்டுரைகளை எடுத்துத் தமது பெயரில் சாசனம் செய்ய முயன்றபொழுதான், டெக்சாஸ் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் புர்னேந்ருதுதாஸ் குப்தாவால் கையும் களவுமாகப் பிடிபட்டார். இதனைச் செவிமடுத்த ஆராய்ச்சி உலகமே நாணத்தால் நடுங்கியது.

படைப்புத் திருட்டுகள் இன்று நேற்றல்ல. படைப்புக் காலம் தொட்டே நிகழ்ந்து வருகின்றன. தமயந்தி சுயம்வரத்தின்போது தமயந்தியை அடைவதற்காக ஒரு டஜன் தேவர்கள் அசல் நளன் போலவே வடிவெடுத்து கிழே இறங்கியிருக்கின்றனர். அருணகிரிநாதர் இலக்கியத் திருடர்களை கடுமையாகச் சாடுவதிலிருந்து அவரது காலத்தில் இது பெருவழக்காக இருந்திருக்கும் போல் தெரிகிறது.

`முதுமொழிகளை நாடித் திருடி ஒருபடி நெருடிக் கவிபாடித் திரியும் சில புலவர்' என்றும் `தெரியும் அருமை பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடி' எனவும் அருணகிரியார் இனம்காட்டுவதிலிருந்து இலக்கியத் திருட்டின் பாரம்பரியம் தெரிகிறது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை தம் காலத்திலிருந்த கவிதைத் திருட்டை நாடகப் பாங்கில் நகைச்சுவை மிளிர அம்பலப்படுத்துகின்றார்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளையிடம் ஒரு கவிதைகளவாடி வந்து கம்பன் பாட்டொன்றைத் தம் பாட்டென்று சொல்லுகிறார். அதற்கு அவர் `இது கம்பருடைய பாட்டாயிற்றே' என்றார். அதற்கு அந்தக் களவாடி `இது என் பாட்டுத்தான்! இப்பொழுது உங்கள் சட்டைப் பையில் நூறு ரூபாய் இருக்கிறது. அதை நான் எடுத்துக்கொண்டால் உங்கள் பையில் அந்த நூறு இருக்காதல்லவா! அதைப்போல கம்பராமாயாணத்திலிருந்து இந்தப் பாட்டை நான் எடுத்திருந்தால் அங்கு அப்பாடல் இருக்க முடியாதே!. இதோ பாருங்கள் கம்பனில் அப்பாட்டு அப்படியே இருக்கிறது.' என்கிறார் சாமர்த்தியமாக. இலக்கியத் திருட்டைக் கண்டு வேதநாயகம் பிள்ளை அடைந்த எரிச்சல்தான் மேற்கூறிய நகைச்சுவை பிறப்பதற்குக் காரணமாயிற்று.

நம் நாட்டில் மட்டுமன்றி மேற்கத்திய நாடுகளிலும் கலப்படம் ஒரு கலையாகவே இருந்திருக்கிறது. அதற்குப் `பிளேஜியாரிசம்' எனவொரு தலைப்பும் கொடுத்திருக்கின்றனர்.

இலக்கியத் திருட்டையும் கலப்படத்தையும் கண்டு வெகுண்ட டி.எஸ்.இலியட் `மாபெரும் கவிஞர்கள் மேற்கோளாக எடுப்பதைக் காட்டிலும் திருடுவது அதிகமாக இருக்கிறது.' என்றார்.

படைப்புத்துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களவாடுபவர்களைக் கண்டு சினந்த புதுமைப்பித்தன். `பிறருடைய எழுத்துகளை எடுத்துத் தன் எழுத்து என்று பிரசுரிப்பவன் தன்னுடைய மனைவிக்கு இன்னொரு ஆடவனுக்கும் பிறந்த குழந்தைக்குத் தான் தகப்பன் எனச் சொல்லுவதற்குச் சமமாவான்' என எச்சரித்த பிறகும் அத்தொழில் நின்றபாடில்லை.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஒரு விரிவுரையாளர் அயல்நாட்டுத் தமிழறிஞர் இ.எஸ்.விசுவநாதனின் படைப்பிலிருந்த ஒரு இயலை எடுத்து அப்படியே தம்முடைய ஆய்வேட்டில் சொருகி டாக்டர் பட்டத்திற்காகச் சமர்ப்பித்தும் விட்டார். துரதிர்ஷ்டவசமாக அவ்வாய்வேடு அதே இ.எஸ்.விசுநாதனிடம் மதிப்பீட்டிற்காகச் சென்று அத்திருட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு அவ்வாய்வாளர் கடுமையகாத் தண்டிக்கவும் பட்டார்.

சில பல ஆண்டுகளுக்கு முன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வாளர் தம்முடைய பி.எச்.டி.பட்டத்திற்காக வேறொரு படைப்பிலிருந்து ஒரு பகுதியை எடுத்துத் தம்முடைய ஆய்வேட்டில் சொருகிவிட்டார். ஆட்சி மன்றக் கூட்டத்தில் இந்தத் திருட்டு வெளிச்சத்திற்கு வர அந்த ஆய்வாளரின் மேற்பார்வையாளராகிய பேராசிரியர் ஒருவரின் பதவி பறிபோயிற்று. ஆய்வாளரின் ஆய்வேட்டை ஆழ்ந்து படிக்காது கையெழுத்திட்டது ஒன்றே அவர் செய்த பாவம். `படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான். ஜயோ என்று போவான்' எனப் பாரதி, என்றைக்கோ பாடியது. இன்றைக்குப் பலிதமாகிக் கொண்டிருக்கிறது.

படிக்காதவனுடைய திருட்டு வயிற்றுப் பசிக்கு மட்டுமே! படித்தவன் திருட்டு பதவிக்கு, பணத்துக்கு புகழுக்கு, ஊரை ஏமாற்றுவதற்கு, உழைக்காமலேயே பலனை அனுபவிப்பதற்கு, படைப்பாளிகளில் சிலரும் ஆராய்சியாளர்களில் பலரும் இந்தக் கலப்பட வேலையில் கை வைப்பதற்குக் காரணம் மக்களுடைய மறதியில் அவர்களுக்கு இருக்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கையே! என்றைக்கோ எழுதியவர்கள் எழுத்தை இன்றைக்கு எங்கே நினைவு வைத்திருப்பார்கள் என்ற எண்ணம் முதற்காரணம். அடுத்ததாக அப்படியே யாராவது என்றைக்கோ எழுதியவரின் எழுத்தை நினைவில் வைத்திருந்து இப்பொழுது செய்யும் இலக்கியத் திருட்டைக் கண்டுபிடிப்பார்கள் என்றாலும் `அவர்கள் எங்கே துணிந்து வந்து அதை வெளிச்சம் போட்டுக் காட்டப்போகிறார்கள்' என்ற நினைப்பும் மற்றொரு காரணம்.

மூன்றாவதாக ஆராய்ச்சியாளர்களிடம் தொழில் ரீதியாகக் காணப்படும் போட்டி மனப்பான்மையும் ஒரு காரணமாக அமைகிறது. `சக பேராசிரியர் ஒருவர் 30 கட்டுரைகளை வெளியிட்டு விட்டாரே. நாம் மட்டும் 20 கட்டுரைகளோடு இருக்கலாமா' என்ற எண்ணம் எழுவது இயற்கை. அத்தகைய எண்ணம் எழுகிறபோது உழைத்து மூளையைக் கசக்கி எழுதுவதற்கு அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. அத்தகைய தருணங்களில் ஒன்று தமக்குக் கீழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களை விட்டு எழுதித்தரச் சொல்லுவார்கள் அல்லது மற்றவர்களுடைய படைப்பை எடுத்துத் தங்களுடையது என்று போட்டுக் கொள்வார்கள்.

முன்னோர்களுடைய மொழிகளையும் பொருள்களையும் எடுத்தாள்வதில் தவறில்லை. ஆனால், எடுத்தாள்கின்ற பொழுது `இன்னாரிடமிருந்து இக் கருத்தைப் பெற்றேன்' என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

சீத்தலைச் சாத்தனர் திருக்குறளிலிருந்து ஒர் செய்தியை எடுக்கின்றபோது "அறம்பாடிற்று அன்றே ஆயிழைக் கணவ' என்றார். மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையிலேயே `எனது சித்திரம் வியாசர் பாரதக் கதையைத் தழுவியது..' அதாவது கற்பனை, திருஷ்டாந்தங்களில் எனது சொந்த சரக்கு அதிகமில்லை. தமிழ் நடைக்கு மாத்திரமே நாம் பொறுப்பாளி' என நாணயமாகவும், நேர்மையாகவும் குறிப்பிட்டுச் செல்கிறார்.

கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலுக்குச் `சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே நில் லென்று, நிறுத்தி வழிச் சென்றவரே' எனும் வரிகளைப் பல்லவியாக அமைத்தபோது, `இதனை நான் நாட்டுப் புறப்பாடலிருந்து எடுத்தேன்' என கம்பீரமாக ஒப்புக்கொண்டார். ஒரே பாடு பொருளை மையமாக வைத்து கம்பர் பாடிவிட்டார் எனக் கேட்ட ஒட்டக்கூத்தர், தாம் பாடிய இராமாயணத்தில் உத்தர காண்டத்தை தவிர மற்றவற்றை எரித்துவிட்டார். கண்ணகி கதையை சீத்தலைச் சாத்தனார் தாம் பாடத் திட்டமிட்டிருந்தார்.; ஆனால், அத்துயரக் கதையைக் கேட்ட இளங்கோவடிகள், `நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்' எனத் தொடங்கிவிட்டதால், சீத்தலைச் சாத்தனார், மாதவி மகள் மணிமேகலை காப்பியத்திற்கு மாறிவிட்டார். இவ்வாறெல்லாம் நம் முன்னோர்கள் காத்த கண்ணியம் இன்று எங்கே? அற உணர்வு இன்று எங்கே?.

உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படம் உடலைத்தான் பாதிக்கும்; ஆனால், உணர்வுப் பொருள்களில், அறிவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படம் ஆன்மாவைப் பாதிக்கும்; அடுத்த தலைமுறையைப் பாதிக்கும்.

`திறமையான புலமையெனில், அதனை வெளிநாட்டார் வணக்கம் செய்திடல் வேண்டும்' என்றான் மகாகவி பாரதி. ஆனால், இன்று நம்மவர் சிலரிடத்து காணப்படும் கலப்படத்தையும் களவாணித் தனத்தையும் கண்டு அவர்கள் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்; கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமன்று; ஏட்டுக்கும் எழுத்துக்கும் கூடத் தேவை!

(கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர்)

- தினமணி

Email this page Your Opinion Print this page
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐ.தே.க.வும் போட்டியிடாததால் முழுமையான தெரிவை ெசய்வதற்கு வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை
உணவில் கலப்படம் உடலைப் பாதிக்கும் அறிவுப் பொருளில் கலப்படம் ஆன்மாவைப் பாதிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com