* மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி தேர்தல் குறித்து பஃவ்ரலின் இடைக்கால அறிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றது. பஃவ்ரல் இயக்கத்தின் கண்காணிப்பாளர்களாலும் வன்முறையற்ற சமாதான (Nonviolence Peace Force) அமைப்பின் சர்வதேச கண்காணிப்பாளர்களாலும் கண்காணிக்கப்பட்டு அறிக்கையிடப்பட்ட சம்பவங்கள் சொற்ப எண்ணிக்கையானவையாக அமைந்தன. வாக்காளர்களின் பங்கேற்பு, நூற்றுக்கு 56% ஐத் தாண்டியிருந்தது. ஒரு சில பிரதேசங்களில் தேர்தல் மிகவும் மும்முரமான போட்டிநிலைக்கு மத்தியில் இடம்பெற்றது. வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டமை இந்தத் தேர்தலின்போது அவதானிக்கப்பட்ட சிறப்பம்சமாகும்.
மாவட்டம் முழுதும் சகல இடங்களிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட 15 நடமாடும் பிரிவுகளால் அறிக்கையிடப்பட்டவாறு, எவ்வித வன்முறைச் சம்பவங்களும் அல்லது காயத்துக்கு உள்ளாக்குதல்களும் இடம்பெறவில்லை. மட்டக்களப்பு நகரசபை எல்லையில் காணப்பட்ட 51 வாக்களிப்பு நிலையங்களுள் 50 ஐயும், மாவட்டத்தின் மத்தி, தெற்கு, தென் கிழக்கு பிரதேசங்களில் காணப்பட்ட 15 வாக்களிப்பு நிலையங்களையும், மாவட்டத்தின் வடக்கு, வடமத்தி பிரதேசங்களில் காணப்பட்ட 21 வாக்களிப்பு நிலையங்களையும் கண்காணிக்கும்போது, வாக்களிப்பு பாரதூரமான சம்பவங்கள் எதுவுமின்றி அமைதியான முறையிலும் சுதந்திரமாகவும் இடம்பெற்றது என்பதை அவதானிக்க முடிந்தது. (மொத்த வாக்களிப்பு நிலையங்களாக அமைந்த 285 வாக்களிப்பு நிலையங்களுள் மேற்போந்த அளவு எண்ணிக்கையிலான வாக்களிப்பு நிலையங்கள் எமது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன).
வாகரை தென் பகுதியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகே மு.ப. 10 மணியளவில் வாக்காளர்களின் நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிந்தது. இந்த வலயத்தில் அதாவது, கோரளைப்பற்று வடக்கு பிரதேசத்தில் 07 வாக்களிப்பு நிலையங்களில் (பிரதேச சபையைச் சேர்ந்த 16 மொத்த வாக்களிப்பு நிலையங்களுள்) மதிய வேளையளவில் குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குகளில் அரைவாசிக்கு மேற்பட்டவை பிரயோகிக்கப்பட்டிருந்தன. சில பிரதேசங்களில் வாக்களிப்பு மந்த கதியில் இடம்பெற்றதையும் அவதானிக்க முடிந்தது. மாவட்டத்தின் வடக்கு, தென் கிழக்கு பிரதேசத்தில் காணப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்த வாக்காளர்களுள் கணிசமான அளவு பெண்கள் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது. சகல வாக்களிப்பு நிலையங்களிலும் இருந்த சிரேஷ்ட தேர்தல் நிலையப்பொறுப்பதிகாரிகள், தேர்தல் தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்தனர். பாரதூரமான சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
மும்முர போட்டியின்றிய பிரதேசமாக அமைந்த வாகரையிலும், தமிழர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பிரதேசங்களிலும் நிலைமை அமைதியானதாக இருந்தது. முஸ்லிம் மக்கள் பரவலாக வாழும் வாக்களிப்புப் பிரதேசங்களில் காணப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் மிகவும் சுறுசுறுப்பான இயக்கத்தை அவதானிக்க முடிந்தது. வாக்களிப்பு நிலையங்களில் அல்லது அவற்றுக்கு அருகில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் படைக்கலன்தாங்கிய சேவைகளின் உத்தியோகத்தர்களும் அடங்கலாக, அரசாங்க உத்தியோகத்தர்கள் பண்பாகவும், கவனமாகவும் தமது கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
*தமிழ் மக்கள் பரவலாக வாழும் பிரதேசங்களில் ரி.எம்.வி.பி. (TMVP) தவிர்ந்த ஏனைய கட்சிகளின் வாக்களிப்பு நிலைய முகவர்களை மிகவும் அரிதாகவே காண முடிந்தது. *பொலிஸ் மற்றும் படைக்கலன் தாங்கிய சேவைகளில் உத்தியோகத்தர்கள் பெருமளவானோர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. *காலை வேளையில் வாக்களிப்பு மிகவும் சுறுசுறுப்பாக இடம்பெற்றது. *அடையாள அட்டை அவசியமானதாக இருந்ததுடன் இறுதி வேளையில் சில மாற்றங்கள் இடம்பெற்றன. (இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படாமை ஓரளவு பிரச்சினை எழக் காரணமாக அமைந்தது) *போட்டியிடும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்களிப்பு நிலைய முகவர்களை வாகரையில் அவதானிக்க முடியவில்லை. கண்காணிப்புக்கு உட்பட்ட பெரும்பாலான துறைகளில் பின்வரும் விடயங்கள் மீது கவனம் செலுத்துவது சிறப்பானதாகும்: கோரளைப்பற்று வடக்கு (வாகரை): *காலை வேளையிலேயே வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்தனர். அத்தகைய பிரதேசவாசிகளின் முக்கிய ஜீவனோபாயமாக அமைந்த கடற்றொழிலுடன் இந்த நிலைமை பிணைந்திருந்தது. *கண்காணிப்புக்கு உட்பட்ட சகல வாக்களிப்பு நிலையங்களிலும் (15 வாக்களிப்பு நிலையங்களுள் 11 வாக்களிப்பு நிலையங்களைச் சேர்ந்த வாக்களிப்பு நிலைய முகவர்களாக (TMVP) ரி.எம்.வி.பி. கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியோர் மாத்திரமே இருந்தனர்). *பிற்பகல் அளவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் இளைஞர் குழுக்கள் இருந்தமை (வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 10/20 மீற்றர் அளவு தூரத்தில்) அவதானிக்கப்பட்டதுடன், வாக்களிப்பு நிலையங்களை நோக்கி வாக்களிப்பதற்காக வருகைத்தந்தவர்கள் அவர்களால் ஒழுங்குபடுத்தப்படுவதை அவதானிக்க முடிந்தது. *வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகாமையில் (TMVP) ரி.எம்.வி.பி. கட்சியினரால் வாக்களிப்பு மோசடிகள் மேற்கொள்ளப்பட்டமை குறித்து சுயேச்சைக் குழு இல. 01 (EPRLF ஈ.பி.ஆர்.எல்.எவ், EPDP ஈ.பி.டி.பி. PLOTE, புளொட்) பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவரால் ஒரு முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. *எமது வருகையுடன் கூடியிருந்தவர்கள் பொலிஸாரால் கலைக்கப்பட்டதை நம்மால் அவதானிக்க முடிந்தது. *பாரதூரமான சம்பவங்கள் அல்லது பிரச்சினைகள் எதுவுமின்றி வாக்களிப்பு இடம்பெற்றதாக சிரேஷ்ட வாக்களிப்பு நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். *ஆயுதந்தாங்கிய பொலிஸாரை வாக்களிப்பு நிலையங்களில் அவதானிக்க முடிந்தது. வாழைச்சேனை: *வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்டனர். பெரும்பாலான வாக்களிப்பு நிலைய முகவர்கள் (ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சுயேச்சைக் குழு இல.3, சுயேச்சைக் குழு இல. 4) வாக்களிப்பு நிலையங்களில் இருந்தமை அவதானிக்கப்பட்டது. (பிற்பகல் 3 மணிக்குப் பின்னர்) கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. *மும்முரமான ஒரு சூழ்நிலை வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் நிலவியமை அவதானிக்கப்பட்டதுடன், மக்கள் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து சற்று தூரத்தில் குழுமியிருந்தனர். *கலகம் அடக்கும் பொலிஸாரால் ஓரளவு பலப்பிரயோகத்துடன் மக்கள் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதையும் நாம் அவதானித்தோம். *போலி அடையாள அட்டைகளை முன்வைத்தலுடன் தொடர்பான சம்பவங்களையும் பதற்றநிலை, நிலவியதையும் எம்மால் அவதானிக்க முடிந்ததுடன், அத்தகைய வேளைகளில் குறித்த நபர்கள் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமை போன்ற தீர்க்ககரமான நடவடிக்கைகள் கூட சிரேஷ்ட வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியாலும் தேர்தல் உத்தியோகத்தர்களாலும் எடுக்கப்பட்டதையும் நாம் அவதானித்தோம்.
தேர்தல் சார்ந்த வன்செயல்களைக் குறைக்கும் நோக்கில் வன்முறையற்ற சமாதான (NonViolence Peace Force) அமைப்பு, தமது சுயாதீன சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஊடாக பஃவ்ரல் இயக்கத்துக்கு உதவி அளித்தது.
மதிப்பீடு:
தேர்தல் அறிவிப்புச் செய்யப்பட்ட வேளை தொடக்கம் முழு தேர்தல் செயற்பாடும் பாரதூரமான வன்செயல்கள் அற்றதாக அமைந்தது. எவ்வாறாயினும், ஜனநாயகச் செயற்பாடுகளுள் அனுமதிக்கப்பட முடியாத விதத்திலான வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை பற்றிய சில அறிக்கையிடல்கள் இக்காலப் பிரிவினுள் பஃவ்ரல் இயக்கத்திற்குக் கிடைத்தது. பஃவ்ரல் இயக்கத்தின் நீண்டகால கண்காணிப்பாளர்களான வன்முறைகளற்ற சமாதான (NonViolence Peace Force) அமைப்பினரால் கண்காணிக்கப்பட்ட ஒரு முக்கிய பண்பாக அமைந்தது யாதெனில், பகிரங்கமாக ஆயுதங்களுடன் எவரையும் அவதானிக்க முடியாமல் இருந்தமையாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலில் போட்டியிடாத தமது தீர்மானத்திற்குக் காரணமாக முன்வைத்த கருத்து, வன்செயல்கள் பெருகும் அபாயம் உள்ளது என்பதாகும். அவர்கள் போட்டியிடாததன் மூலம் முழுமையான ஒரு தெரிவை மேற்கொள்வதற்கு வாக்காளர்களுக்கிருந்த வாய்ப்பு இழக்கப்பட்டது. சில பிரதேசங்களில், அசல் போட்டிநிலை காணப்படவில்லை. என்பதுடன், அதன் விளைவாக போட்டியிடும் கட்சிகளால் தேர்தல் செயற்பாடு தொடர்பில் காணப்பட வேண்டிய பொதுவான பாதுகாப்பு போதுமான விதத்தில் நிலவவில்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது. (TMVP) ரி.எம்.வி.பி. கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளைச் சேர்ந்த வாக்களிப்பு நிலைய முகவர்கள் சில பிரதேசங்களில் இருக்கவில்லை என்பதும் பஃவ்ரல் இயக்கத்தின் கண்காணிப்பாளர்களால் அவதானிக்கப்பட்டது.
ஒப்பீட்டு, ரீதியில், வாக்காளர்களின் உயர் பங்கேற்பு மூலம் இராணுவ மற்றும் படை சார்ந்த நிலைமைகளால் மாற்றமுறுவதற்காகவும், ஜனநாயக நிறுவனங்கள் மீள நிறுவுவதற்காகவும் மக்களுள் இருந்த அவா வெளிப்பட்டது. ஆகையால், வழமை நிலையையும் ஜனநாயக செயற்பாட்டையும் மீள நிறுவும் பணிக்காக பயனுறுதிவாய்ந்த விதத்தில் பங்கேற்பது சகல அரசியல் கட்சிகளினதும் பொறுப்பு என பஃவ்ரல் இயக்கம் நம்புகின்றது.
கிங்ஸ்லி ரொத்ரிகோ தவிசாளர் -பஃவ்ரல் இயக்கம்