* ரணில் எச்சரிக்கை; மக்கள் போராட்டம் வெடிக்கும் என்கிறார்
எம்.ஏ.எம். நிலாம்
அரச பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான மக்கள் போராட்டம் எந்த நேரத்திலும் வெடிக்கலாமென எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசுக்கும் ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்ட கால அவகாசங்களை உரிய முறையில் பயன்படுத்தத் தவறியதால் மக்கள் எதிர்ப்பலை மேலோங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி தேர்தலும் மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலும் முறைகேடாகவே நடத்தப்பட்டதாகவும் பயங்கரவாதக் குழுக்களின் ஆதரவுடன் மகிந்த ராஜபக்ஷவும் அவரது கட்சியும் இத் தேர்தல்களை நடத்தி மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை தடை செய்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெரஸ் இல்லத்தில் நேற்று திங்கட் கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைலவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
"இன்று இந்த நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் சமூகம் அரச வன்முறைக்குப் பயந்து வாழும் நிலையே எப்பக்கம் பார்த்தாலும் காணப்படுகின்றது. மிகச்சிறியதொரு குழுவே அரச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அப்பாவி மக்களால் வாய்திறந்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்புடன் நடத்தி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுத்ததோடு நின்றுவிடாமல் அண்மையில் நடத்தப்பட்ட மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிள்ளையான் தலைமையிலான ஆயுதக் குழுவின் பூரண ஆதரவைப் பெற்றுக் கொண்டது. கடந்த இரண்டு தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்குரிமை முழுமையாக பறித்தெடுக்கப்ட்டுள்ளது.
நாட்டில் இன்று சுதந்திரமான தேர்தலுக்கு பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசத்தின் இறைமை, சட்டம், ஒழுங்கு, அமைதி போன்றவற்றுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் திகதி அறிவிக்கப்பட்ட மறுதினமே செங்கலடி, வாகரை போன்ற இடங்களில் ஆயுதக் குழுவினர் தமது அச்சுறுத்தலை அப்பகுதி தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கத் தொடங்கிவிட்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரிலேயே இந்த ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பார்க்கும் போது நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் ஜனாதிபதி ஆவார். ஜனாதிபதியின் பூரண ஒத்துழைப்புடன் ஆயுதமுனையில் இத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் விருப்பமின்றி கட்டாயத்தின் பேரில் இதனைச் செய்ய நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயாதீனமான பொலிஸ், தேர்தல் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படாமையே இத்தகைய மோசமான நிலை உருவாவதற்குக் காரணமாகும். பாதுகாப்பு அமைச்சினதும் பாதுகாப்புத் தரப்பினதும் இரகசிய நடவடிக்கைகள் பற்றி கருணா பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் விளக்கிக் கூறியிருக்கின்றார். இது இன்று சர்வதேச சமூகத்தால் ஆழமாக கவனத்திலெடுக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது.
2002 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா எமக்கு எந்தவிதமான ஆயுத உதவிகளையும் வழங்கவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அரசியல் தீர்வு யோசனையை முன்வைத்து பல்வேறு சமாதான முயற்சிகளையும் முன்னெடுத்ததன் பயனாக முதலில் அமெரிக்கா எமது படையினருக்கு பயிற்சியளிக்க முன்வந்தது. அதன் பின்னர் ஆயுத உதவிகளையும் யுத்தக் கப்பலையும் தரமுன்வந்தது.
இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. அமெரிக்காவின் இந்த உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மிக மோசமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருப்பதன் விளைவாகவே இந்த நிலை உருவாகியுள்ளது. விடுதலைப்புலிகள் மட்டுமன்றி பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளும் சிறுவர்களை தமது படைகளுக்கு சேர்ப்பதாலேயே அமெரிக்கா இந்த முடிவை எடுத்திருக்கின்றது. புலிகளை புறந்தள்ளி விட்டு பிள்ளையான் குழுவை அரசு சேர்த்துக்கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனக் கூறிக்கொண்டு மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலை மேலும் தொடருமானால் நாட்டில் ஆறாவது மகிந்த மன்னனும் இரண்டாவது வரதராஜ பெருமாளும் விரைவில் தலையெடுப்பார்கள்.
இந்தப் பேராபத்திலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான போராட்டத்துக்கான காலம் உதயமாகியுள்ளது. எந்த நேரத்திலும் மக்கள் போராட்டம் வெடிக்கலாம். அரசுக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் வீணாகிவிட்டதாகவே மக்கள் கருதுகின்றார்கள். மக்கள் எழுச்சிக்கான வேலைத்திட்டம் தயாராகியுள்ளது. இதில் கட்சி, அரசியல் பேதமின்றி அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைவதன் மூலமே பேரழிவிலிருந்து நாட்டையும் மக்களையும் காக்க முடியம்" எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.