* பெற்றோர் பீதி; பாடசாலைகள் மூடப்பட்டன
பெல்மதுளை பிரதான நகரில் அமைந்துள்ள தேசிய பாடசாலை ஒன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பாடசாலை பஸ்ஸிலிருந்து குண்டொன்றை நேற்று இராணுவத்தினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளனர்.
பானகொடையிலிருந்து பெல் மதுளை பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி வரும் தனியார் பஸ்ஸிலிருந்தே இந்த குண்டு மீட்கப்பட்டது.
சம்பவதினம் காலை 9.30 மணியவில் குறிப்பிட்ட பஸ்ஸில் மர்மப் பார்ஷல் ஒன்று இருப்பதாக பொலிஸார் அவசர சேவைக்கு (119) பஸ் சாரதி தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து குறிப்பிட்ட மர்மப் பார்ஷலை பரிசோதனை செய்தனர். இதனையடுத்து அந்தப் பார்ஷலில் இருந்தது குண்டென கண்டறியப்பட்டு இது தொடர்பில் குருவிட்ட இராணுவ முகாமிற்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த இராணுவத்தினர் குண்டினை மீட்டு பெல்மதுளை கங்கந்த மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் வைத்து செயலிழக்கச் செய்தனர்.
பாடசாலை பஸ்ஸிலிருந்து குண்டு மீட்கப்பட்ட செய்தி நகரம் முழுதும் பரவியதனைத் தொடர்ந்து பெற்றோர் தமது பிள்ளைகளை தேடி பாடசாலைகளுக்கு விரைந்ததனால் பதற்றம் அதிகரித்தது. அத்துடன், பல பாடசாலைகள் நேரத்துடன் மூடப்பட்டன. இதனால், காலையில் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
பொலிஸாரும் இராணுவத்தினரும் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடத்தினர்.