வன்னியில் புலிகள் இயக்கத்தினரின் முகாம்கள், பதுங்குகுழித் தொடர்கள் மற்றும் புலிகள் இயக்கத்தினதும் தலைவர்களினதும் கேந்திர நிலையங்கள் மீது அரச படையினர் தினமும் தொடுத்துவரும் தீவிர தாக்குதல்களால் குறிப்பாக விமானப் படையினரின் யுத்த விமானங்கள் மூலம் நடத்தப்படும் குறிதவறாத குண்டுத் தாக்குதல்களால் பெரும் பீதியடைந்திருக்கும் புலிகள் இயக்கத்தினரும் அவர்களின் தலைவர்களும் படையினரின் தாக்குதல்களுக்குத் தொடர்ந்தும் முகம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது முகாம்களிலிருந்த வெளியேறி வேறு பகுதிகளுக்குப் பின்வாங்கி வருவதாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக பாதுகாப்புத்துறை தரப்பில் இராணுவ அறிவிப்பாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார திவயின பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். இவ்வாறு வன்னியிலிருந்து குறிப்பிட்ட சில முகாம்களிலிருந்து புலிகள் இயக்கத் தலைவர்கள் தமது படையணியினருடன் வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும், குறிப்பாக வன்னி மேற்குப் பகுதியிலுள்ள முகாம்களிலிருந்தே தற்போது புலிகள் இயக்கத்தினர் பெரும்பாலும் வெளியேறி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பின்வாங்கிச் செல்லும் போது குறித்த முகாம்களையும் பிரதேசங்களையும் கைப்பற்றுவதற்காக முன்னேறிவரும் அரச படையினருக்குப் பெரும் உயிர்சேதங்களை விளைவிக்கும் நோக்கத்தில் கைவிட்டுச் செல்லும் முகாம் பகுதிகளிலும் பாதைகளிலும் நிலக்கண்ணிகளைப் பெருந்தொகையில் புதைத்துவிட்டே மேற்படி புலிகள் இயக்க அணியினர் பின்வாங்கிச் செல்கின்றனர்.
அத்துடன் முன்னேறி வரும் அரச படையினரைத் தடுப்பதற்காக புதிய போர் முனைகளை புலிகள் இயக்கத்தினர் தயார்படுத்தி வருவதாகவும் இதற்காகக் குறிப்பிட்ட பகுதிகளிலும் முகாம்களிலும் நிலைகொண்டிருந்த படையினரில் ஆண்கள் படையணியினர் பின்வாங்கி புதிதாக அமைக்கப்படும் போர் முனைகளுக்குச் செல்வதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ஆண்கள் படையினர் விட்டுச் செல்லும் முகாம்களில் பெண்புலிகள் படையணியினரே தற்போது நிலைகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இவ்வாறு வன்னியில் பெரும்பாலான முகாம்களில் பெண்புலிகள் படையினரே முன்னணியில் செயற்படுவதால், அண்மைக் காலங்களில் அரச படையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் நடந்துள்ள தீவிர மோதல்களின் போது உயிரிழந்த புலிகள் இயக்கத்தினரில் குறிப்பிடும் படியான எண்ணிக்கையில் பெண்புலிகளும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த வாரம் வன்னியில் நிகழ்ந்த மோதல்களின் போது பெண்புலிகளும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலை குறிப்பிட்ட முகாம்களிலிருந்து ஆண் புலிகள் படையணியினர் பின்வாங்கிச் செல்லுவதை நிரூபிப்பதாக இருப்பதாகவும் எவ்வாறாயினும் தமது கட்டுப்பாட்டிலுள்ள சில பிரதேசங்களிலிருந்து புலிகள் இயக்கத்தின் அனைத்துப் படையணியினரும் பின்வாங்க ஆரம்பித்துள்ளதை அப்பகுதியிலிருந்து தெரிவிக்கப்படும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அண்மைக் காலங்களில் நடந்த மோதல்களின் பின்னர் அரச படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளின் முகாம்களிலும் பதுங்குகுழிகளிலும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களிலிருந்து அம் முகாம்களிலிருந்த புலிகள் இயக்கத்தினர் அங்கிருந்து பின்வாங்கிச் செல்லு முன்னர் கடும் உணவுத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும், அந்த முகாம்கள், பதுங்கு குழிகளில் சிதறிக் கிடந்த உணவுக் கழிவுகளில் காய்ந்துபோன இடியப்பங்களும் வெற்றுப்பொதிகளும் காணப்பட்டதாகவும் இவை புலிகள் இயக்கத்தினர் உணவுப்பஞ்சத்தில் அவதிப்படுவதை நிரூபிப்பதாக உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வன்னியிலுள்ள புலிகள் இயக்க முகாம்களிலிருந்து படையினரின் தீவிர தாக்குதல்கள் காரணமாகப் பின்வாங்கும் புலிகள் கடும் உணவுப் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தது மட்டுமன்றி பொதுவாக வன்னியிலுள்ள அனைத்து புலிகள் இயக்க முகாம்களிலும் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ அறிவிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
திவயின : 16.03.2008