தமிழ், சிங்கள மக்களுடனும் ஜனநாயகத்தை மதிக்கும் சக்திகளுடனும் இணைந்து, கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும், ஆயுதந்தாங்கிய குழுக்களின் அடாவடித்தனங்களுக்கு மத்தியில், ஜனநாயகத்தை கிழக்கில் மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முயற்சியினை பலத்த சவால்களின் மத்தியில் தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொறகொட உடுமுல்ல பிரதேசத்தில் வரவு செலவுத் திட்ட நிதியின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட சனசமூக நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஹாரிஸ்பத்து பிரதேச அமைப்பாளர் எல்.எஸ். விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
அரசாங்கத்தில் தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சராக இருந்து அரசுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக நாம் விலக நேரிட்டாலும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முஸ்லிம் மக்களிடம் மட்டுமின்றி ஏனைய இன மக்களிடமும் ஆதரவு நிரம்பிய கட்சியாக தொடர்ந்தும் இருக்கிறது. இதற்கு சிங்கள மக்களும் பேருதவியாக இருக்கிறார்கள். இன்று எனக்கெதிராக பலவித இனவாத சேறுபூசல்கள் நடக்கின்றன. ரூபவாஹினி மற்றும் அரச ஊடகங்களின் ஊடாக எனக்கு இனவாதி எனும் லேபல் ஒட்ட முயற்சிக்கப்படுகிறது. கிழக்குப் பிரதேசத்தில் முஸ்லிம் தேசம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கும் ஒருவராக என்னைக்காட்ட பொய்களைக் கூறி பிரசாரம் செய்து வருகின்றனர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இத்தகைய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இம்மக்களின் அபிமானத்தைப் பெற எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது எனக்கு பலத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. கடந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பலரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு சிங்களவர் ஒருவர் எமது கட்சி சார்பில் வென்றிருக்கிறார்.
அண்மையில், ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வொன்றில் ஜனாதிபதியே ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சிங்களவர் ஒருவர் தெரிவானது எப்படி என்று கேள்வி எழுப்பியிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். மட்டக்களப்பில் தமிழ் பிரதேசங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான சிங்கள மக்கள் இருக்கும் நிலையில் இவர்களை பிரதிநிதித்துவம் செய்ய நாம் இடமேற்படுத்திக் கொடுத்திருக்கிறோம் எனவும் ஹக்கீம் தனது உரையில் குறிப்பிட்டார்.