திபெத்தில் நடைபெறும் வன்முறைகளைத் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரம் செல்ல சீனா தடை விதித்துள்ளது. அதுபோல் நேபாளம் வழியாகச் செல்ல நேபாளம் அரசு தடை விதித்துள்ளது. சீனாவின் வேண்டுகோளை ஏற்று நேபாள அரசு இத்தடையை அறிவித்துள்ளது.
திபெத்தியர்களின் போராட்டத்தை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் திபெத்தியர்களால் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்தத் தடை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சீனாவை எதிர்த்து நேபாளத்திலும் திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்மண்டுவில் உள்ள ஐ.நா கட்டிடம் எதிரே ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் கூடி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"திபெத்தில் படுகொலையை நிறுத்து" என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்களின் கண்களில் நீர் வழிந்தது. அவர்கள் திபெத் கொடியை கையில் பிடித்திருந்தனர்.
ஆனால், பொலிஸார் அவர்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
"போராட்டம் அமைதியான முறையில்தான் நடைபெற்றது. நாங்கள் பொலிஸாரை அழைக்கவில்லை. ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் தேவையில்லாமல் பலத்தைப் பிரயோகித்தனர்" என்று ஐ.நா. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.