படிப்பு வராததால் இராணுவத்தில் சேர்ந்தேன் என பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் தெரிவித்தார்.
8 ஆண்டுகளாக பாகிஸ்தானில் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் முஷாரப் ஜியோ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது தாய், தந்தையரைப் பற்றி மனம் உருகக் குறிப்பிட்டார்.
எனது அன்னை பள்ளி ஆசிரியராக இருந்தார். தினமும் 2 மைல் தூரம் நடந்தே பள்ளிக்குச் சென்று வருவார். அதில் சேமிக்கும் பணத்தை வைத்து எனக்கும் சகோதரர்களுக்கும் பழங்கள் வாங்கித் தருவார். தாய் ஜரீனா பேகம் எனது வாழ்வின் மிக முக்கியமான நபர் என்றார் முஷாரப்
தந்தையைப் பற்றி பேசிய முஷாரப், அவர் பாகிஸ்தான் அரசுக்கு மிகவும் விசுவாசமாகவும் நேர்மையாகவும் இருந்தார் எனக் குறிப்பிட்டார். எனக்கு படிப்பு சரியாக வராது. அதனால், இராணுவத்தில் சேருமாறு ஊக்கப்படுத்தினார் எனது தாய். கல்வியை விட கடினமானது இராணுவம் என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார் முஷாரப்.
நடுத்தர குடும்பத்திலிருந்து வந்ததாக குறிப்பிட்ட முஷாரப், கடவுள் எல்லாவற்றையும் எனக்கு கொடுத்திருந்தார். அதனால், எந்த எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொள்ளவில்லை. பதவி உயர்வுக்காக ஒரு போதும் வேலை செய்ததில்லை. செல்வாக்கையும் அதற்காக பயன்படுத்தியதில்லை என்றார்.
கடந்த 8 ஆண்டுகளாக தனிமையில் இருப்பதாக உணர்கிறேன். ஆனால், ஒரு போதும் உற்சாகம் இழந்ததில்லை என்றும் குறிப்பிட்டார் முஷாரப்.
பாகிஸ்தானியர்கள் கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள் என குறிப்பிட்ட முஷாரப், பிரிவினைக்கு பின்னர் அவர்கள் நெடுந்தொலைவுக்கு வந்துள்ளனர். நல்ல தலைவர்கள் கிடைத்திருந்தால் அவர்கள் இன்னும் முன்னேறியிருப்பார்கள் என்றார். இராணுவ தளபதியாயிருந்து அரசியலுக்கு வந்த அந்த ஜனாதிபதி, தான் மிகவும் வெளிப்படையான நபர் என்றும் உடன் பணிபுரிபவர்களிடமும் குடும்பத்தினருடனும் சகஜமாக பழகுவேன் என்றும் முஷாரப் பேட்டியின் போது தெரிவித்தார்.