திபெத் தலைநகர் லாசாவில் நடைபெறும் வன்முறைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தலாய் லாமாவே மூலகாரணமென சீனப் பிரதமர் வென் ஜியாபோ குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவுக்கெதிரான திபெத்தின் கிளர்ச்சியை நினைவுகூருமுகமாக கடந்த பத்தாம் திகதி ஆரம்பமான ஆர்ப்பாட்டங்களில் இதுவரை எண்பதுக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாமென தலாய் லாமா தெரிவித்துள்ள அதேவேளை, வாகனங்கள் மற்றும் கடைகள் என்பனவும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவின் அடக்குமுறைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தலாய் லாமா அழைப்பு விடுத்துள்ள அதேவேளை, சீனா பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த சீனப் பிரதமர் வென்ஜியாபோ மேலும் தெரிவிக்கையில்;
இன ரீதியான அழிப்புப் போராட்டத்தை தலாய் லாமா முன்னெடுத்துள்ளார்.
அங்கு நடைபெறும் வன்முறைகளை தடுக்கும் தேவை சீன அரசுக்குள்ளதுடன், அந்நடவடிக்கைகளிலும் சீன அரசு ஈடுபட்டு வருகின்றது.
இக்கலவரங்கள் அனைத்தும் நன்றாக திட்டமிட்டபடியே தலாய்லாமாவாலும் அவர் சார்ந்த குழுவாலும் நடத்தப்படுகின்றமைக்கு உரிய ஆதாரங்கள் உள்ளன.
இவ்வாறான கலவரங்களாலோ அல்லது போராட்டங்கள் மூலமோ தீர்வொன்றினைக் காணமுடியாது. ஆனால், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஓர் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முடியுமெனத் தெரிவித்தார்.
தலாய் லாமா சீன அரசானது திபெத்திய கலாசாரத்தை நிர்மூலமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பல வருடங்களாக தெரிவித்து வருகிறார்.