* ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது
இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் குறித்து இலங்கை அரசு வழங்கியுள்ள உறுதி மொழிகளை வரவேற்பதாகக் கூறிய ஐரோப்பிய ஒன்றியம் அதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில், பெரும் கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மனித உரிமை நிலைமைகள் குறித்து பல்வேறு கருத்துகளை அறிந்துகொள்வதற்காக இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தமது விஜயத்தின்போது அரச தரப்பில் மனித உரிமைகள் அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலதரப்பினருடன் மனித உரிமைகள் குறித்து ஆழமாகக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த இந்தத் தூதுக்குழுவின் தலைவரான ஸ்லோவேனியா, வெளியுறவு அமைச்சின் பணிப்பாளர் ஜான்ஸ் பிறிமோஸ் இம்முறை இந்த விஜயத்தின்போது அரசாங்கத் தரப்பும் இலங்கை மக்களிடமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நட்புறவு, ஆதரவு மற்றும் முக்கிய செய்திகளை தெரிவிப்பதற்காகவே வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து மிகவும் விசனமடைந்திருக்கின்றோம். அத்துடன், ஜனாதிபதியின் விசேட விசாரணை கமிசனின் விசாரணைகளை கண்காணித்து வந்த சர்வதேச பிரசித்தி பெற்ற நிபுணர்கள் குழு இந்த விசாரணைகள் சர்வதேச தரத்திற்கு அமைவானதாக அமையவில்லையென்றும், அமைப்பு ரீதியான ஆதரவு அதற்குக் கிட்டவில்லையென்றும் கூறி தமது கண்காணிப்புப் பணிகளை நிறுத்தி வெளியேறியிருப்பது குறித்து நாம் கவலையடைகின்றோம்.
சர்வதேச பிரசித்திபெற்ற நிபுணர்கள் குழுவினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் உயர்ஸ்தானிகர் விதந்துரைகளின்படி, இவ்வாறான சம்பவங்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்வதினூடாக சுயாதீன மனித உரிமைகள் கண்காணிப்பு இடம்பெறுவது தொடர்பில், அரசு உறுதியான முடிவை தரவேண்டும் என்பதை ஐரோப்பிய ஒன்றியமும் கோடிட்டுக்காட்ட விரும்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜான்ஸ் பிறிமோஸ் தெரிவித்தார்.
ஆயினும் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாக ஐரோப்பிய ஒன்றியம் தனது பணியினை ஆற்றிவரும் எனக்கூறிய அவர், சமாதான முயற்சிகளில் அனுசரணையாளர்களான நோர்வேயும் ஏனைய இணைத் தலைமை நாடுகளின் உறுப்பினர்களும் கிளிநொச்சி செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்தார்.
இது சமாதான முயற்சிகளுக்கு விடுதலைப் புலிகள் மீண்டும் திரும்ப வேண்டும் என்பது தொடர்பில் முக்கிய செய்திப் பரிமாற்றத்திற்கு மிக அவசியமென்றும் அவர் கூறினார்.
வன்முறைச் சம்பவங்களின்போது சிவிலியன்கள் பாதிக்கப்படுவதை சகல தரப்பும் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.