* கப்டன் மஹேல கூறுகிறார்
மேற்கிந்திய சுற்றுப் பயணம் இலங்கையின் இளம் வீரர்களுக்கு மிகவும் வாய்ப்பானதாயிருக்குமென இலங்கை அணித் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி மேற்கிந்தியா சென்றுள்ளது.
மிகவும் இளம் வீரர்களைக் கொண்ட அணியே இம்முறை அங்கு சென்றுள்ளது. 15 பேரைக் கொண்ட இலங்கை அணியில் ஐந்து பேர் மட்டுமே மேற்கிந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளனர். ஏனைய அனைவரும் அந்த மண்ணுக்குப் புதியவர்கள்.
இளம் வீரர்களைக் கொண்ட அணி மேற்கிந்தியத் தொடரில் கலந்துகொள்வது அவர்களது எதிர்காலத்திற்கு நன்கு உதவுமெனவும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் அவர்கள் பங்குபற்றுவதால் அவர்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள உதவுமெனவும் கப்டன் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும் மிகுந்த அனுபவமுள்ளவர்கள். இவ்விருவரும் தங்களுக்கிடையில் 164 டெஸ்ட் போட்டிகளில் 13,000 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.
சனத் ஜெயசூரிய மற்றும் மார்வன் அத்தபத்து இல்லாதபோதும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கும் மைக்கல் வன்டொற் மற்றும் மலிந்த வர்ணபுர ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடுவரென எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் அணியுடன் களமிறங்கும் இலங்கை அணி இத்தொடரில் சாதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்ததொரு அணியை உருவாக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.