*இராணுவத் தளபதி டில்லிக்கு 6 நாள் விஜயம்
இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார்.
இரு நாடுகளுக்குமிடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கிலேயே இவரது புதுடில்லி விஜயம் அமைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இவரது இந்தியப் பயணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படாத போதும் தனது விஜயத்தின் போது லெப். ஜெனரல் சரத் பொன்சேகா இந்திய படை அதிகாரிகளுக்கு இலங்கை நிலைமைகள் குறித்தும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் விளக்கமளிப்பாரென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம், புதுடில்லியிலுள்ள `இந்தியா கேற்' வளாகத்தில் முதலாம் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவுத் தூபிக்கும் சென்று அஞ்சலி செலுத்துவார். அதன் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.
இதேநேரம், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் இலங்கைப் படையினரின் கை ஒதுங்கியிருப்பதையே விரும்பும் இந்தியா, இலங்கைப் படையினர் பிடியை இழந்து வருவதை விரும்ப வில்லையென இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இதேநேரம், ்இலங்கையில் இரு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தியா மிகத் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதாவது, இலங்கை இராணுவத்தின் கையே இலங்கைப் போரில் ஓங்கியிருக்க வேண்டுமென்பதும் சிறுபான்மையினர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டுமென்பதுமே அவையாகும்.
மேலும், இரு நாட்டுக் கடற்படையினரும், புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் உட்பட பல்வேறு விடயங்களிலும் இணைந்து செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.