அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் முக்கோண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு அவுஸ்திரேலிய, இந்திய அணிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இவ் இரு அணிகளுக்குமிடையில் 3 இறுதி ஆட்டங்கள் நடைபெறும். 1 ஆவது இறுதி ஆட்டம் இன்று 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகும்.
2 ஆவது இறுதி ஆட்டம் 4 ஆம் திகதி பிறிஸ்பேர்ன் மைதானத்திலும் 3 ஆவது இறுதி ஆட்டம் 7 ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்திலும் நடைபெறும். இந்த 3 இறுதி ஆட்டங்களிலும் ஒரு அணி தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் 3 ஆவது ஆட்டம் நடைபெறமாட்டாது.
இவ்விரு அணிகளுக்குமிடையில் ஆரம்ப சுற்றில் நடைபெற்ற 4 ஆட்டங்களில் அவுஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி மழையினால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
இவ்விரு அணிகளும் தற்போது கிட்டத்தட்ட சமபலத்துடன் திகழ்வதனால் இவ்விறுதி ஆட்டங்களில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. ஆனாலும், இவ்விரு அணி வீரர்களும் முன்னைய ஆட்டங்களில் இன ரீதியிலான சொற்பிரயோகங்களையும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்ததிலும் தண்டனைக்குள்ளாகி உள்ளனர்.
இவ்வாறான நிலை இறுதி ஆட்டங்களிலும் தொடருமானால் வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டால் போட்டியின் முடிவுகள் வேறுவிதமாக மாறக்கூடுமென்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்த நிலையில் நாடு திரும்புகின்றது.
இலங்கை அணி ஆரம்ப சுற்றில் பங்குபற்றிய 8 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டும் இந்திய அணியை வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் மழையினால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
இத்தோல்விகளுக்கு எல்லாம் வீரர்களின் நடத்தையே முக்கிய காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. முக்கிய வீரர்கள் சிலர் இரவு களியாட்ட ஹோட்டல்களுக்குச் சென்று நேரம் கடந்து வருவதும் இதனால் பயிற்சிகளில் ஈடுபடாமல் அறைகளில் முடங்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபற்றி இலங்கை அணியின் பொறுப்பாளர்களிடம் பத்திரிகையாளர்கள் வினவியபோது இது எல்லாம் தவறான வதந்திகள் என்று கூறி தப்பிவிடுவதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறான ஒரு நிலை 2007 ஆம் ஆண்டு மே. இந்திய தீவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியிலும் பங்குபற்றிய இலங்கை வீரர்களும் ஈடுபட்டதாகவும் இதுபற்றிய எந்த ஒரு விசாரணைகளையும் ஷ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அணி அடுத்த சுற்றுலாவை மே.இந்தியத் தீவுக்கு மேற்கொள்ள இருக்கின்றது. இச்சுற்றுலாவில் இலங்கை அணியில் முன்னர் இடம்பிடித்த வீரர்கள் மத்தியில் சில மாற்றங்கள் நிகழக்கூடுமென்றும் தெரிவிக்கப் படுகின்றது.