திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீனப்பிரதமர் வென் ஜியாபோ தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தடவையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்;
தனி நாடு கேட்பதைக் கைவிட்டு திபெத் சீனாவின் பகுதி என்று ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவருடன் பேச சீனா தயாராக உள்ளது.
தாய்வானும், திபெத்தும் சீனாவின் பகுதிகள். இதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். தனி நாட்டு கோரிக்கையை அவர் கைவிட்டுவிட்டால் பேச்சுவார்த்தைக்கு அவருக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார் ஜியாபோ.
மேலும் திபெத்தில் சீன அரசு கலாசார படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்று தலாய் லாமா சொல்வதில் சிறிதும் உண்மை இல்லை. திபெத் தலைநகர் லாசாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பின்னணியில் இருந்து தூண்டிவிட்டது தலாய் லாமாவும் அவரது ஆதரவாளர்களும்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
லாசா வன்முறைச் சம்பவங்கள் குறித்து உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், சீனாவில் முக்கியத் தலைவர்கள் அது பற்றி எதுவும் பேசாமல் மௌனம் காத்தனர்.
ஆனால் முதல் முதலாக வென் ஜியாபோ, அதுபற்றி பேசி தலாய்லாமாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.