ஈராக்கில் ஸியா முஸ்லிம்களின் புனித நகரமாக கருதப்படும் கர்பலா நகரிலுள்ள மசூதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலியானதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி ஈராக்கிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே பாக்தாத்திலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கர்பலா நகரில் பெண் தற்கொலைக் குண்டுதாரியொருவர் இத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் ஹுசைனின் அடக்க தலம் உள்ள இடத்திற்கு புனித பயணம் வந்தவர்கள் கூடியிருந்த இடத்திற்கு வந்த தற்கொலைக் குண்டுதாரி தனது உடலில் கட்டியிருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்தார்.
இதில் 52 பேர் பலியானதுடன் 75 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 5 பேர் ஈரானியர்களாவர். மேலும் 8 ஈரானியர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு தற்கொலைக் குண்டுதாரி தான் காரணம் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். ஆனால், இதை கர்பலா பொலிஸ் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் ரயேத் ஷகீர் ஜாவ்தாத் ஏற்க மறுக்கிறார். அவர் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்துதான் இந்த தாக்குதல் நடந்தது என்று கூறினார்.
இதை தொடர்ந்து இமாம் உசேன் மசூதி இருக்கும் இடத்தை சுற்றியுள்ள பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரலில் கர்பலா நகரில் இன்னொரு மசூதியில் நடந்த தாக்குதலில் 70 பேர் பலியானதுடன் 160 பேர் காயமடைந்தனரென்பது குறிப்பிடத்தக்கது.