கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து போட்டியிடும் பட்சத்தில், அக்கூட்டணியில் இணைவதற்கு முஸ்லிம் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளன.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆளும்கட்சி குழுக் கூட்டத்திலேயே முஸ்லிம் மற்றும் இடதுசாரி கட்சிகள் தமது தயக்கத்தை நேரிடையாக வெளிப்படுத்தியுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கெதிராக ஆயுதக் குழு என்ற குற்றச்சாட்டு நிலவுகையில் அரசாங்கத் தரப்புடன் கூட்டுச் சேர்வது பாதகமான விளைவை ஏற்படுத்துமெனவும் இதன்போது கட்சிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆளும்தரப்பு ஆயுதக் குழுவுடன் இணைந்து போட்டியிடுகின்றமையானது முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழக்க வேண்டியேற்படுமென எச்சரித்துள்ளதாக அறியவருகிறது.
இவ்வாறு இடதுசாரிக் கட்சிகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றமைக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஏற்படும் பாதகங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாரிய கூட்டணி குறித்த முதற் கூட்டத்திலேயே இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் மற்றுமொரு திகதி குறிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடதுசாரிக் கட்சிகள் தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் அறியவருவதாவது; ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஆயுதக் குழுக்கள் எவையேனும் கூட்டுச்சேரும் பட்சத்தில் இடதுசாரிக் கட்சிகள், அமைச்சர் டக்ளஸ், சித்தார்த்தன் மற்றும் சிறிதரன் ஆகியோரின் கட்சிக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் றிஷாட்
இதேவேளை, எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் சமூகத்தின் நலனைக் கவனத்திற்கொண்டு முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட முன் வருமாறும் அரசில் அங்கம்வகிக்கும் சகல கட்சிகளும் காங்கிரஸின் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கடந்த இரு தசாப்த அரசியல் வரலாற்றில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வந்த இன்னல்கள், துன்பங்கள், உயிர் இழப்புகள், பொருட் சேதங்கள், இடம்பெயர்வுகள் கறை படிந்த நிகழ்வுகளையே ஏற்படுத்தியுள்ளதை நாம் மறந்துவிட முடியாது.
இவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாதிருக்க வேண்டுமென்பதில் அரசில் பங்காளியாக இருக்கும் எமது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களும் எமது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும் ஏகோபித்த கருத்துடன் காணப்படும் இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பிரித்து தொடர்ந்தும் அம்மக்களது உரிமைகளை கேள்விக் குறியாக்கும் நிலையை உருவாக்க நினைக்கக்கூடாது.
முஸ்லிம் சமூகத்தின் முகவரிக்காக தன்னைத் தியாகம் செய்த முதுபெரும் பெருந் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரபின் கனவை நனவாக்க எமது தனிப்பட்ட கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் ஒன்றுசேர்ந்து செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதால் முஸ்லிம்களின் ஒற்றுமையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வர வேண்டும் என அவர் மேலும் இந்த செய்திக் குறிப்பில் கேட்டுள்ளார்.