* சுட்டிக்காட்டுகிறது முஸ்லிம் காங்கிரஸ்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரச பயங்கரவாதமும், ஆயுதக் குழுக்களுமே பெரும் சவாலாக அமையுமென தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாவிட்டாலும் தமிழ் மக்களை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு அக்கட்சிக்கு உள்ளதென சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலி எம்.பி.கருத்துத் தெரிவிக்கையில்;
மட்டு. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் போன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளும் தமக்கு சாதகமாக அமையுமென அரசாங்கம் பகல் கனவு காணுகிறது. எனினும் இப்பகல் கனவு பலிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகள் இடமளிக்கப்போவதில்லை.
அரச பயங்கரவாதமும், ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனமும் நீதி, நியாயமிக்க தேர்தலுக்கு மிகப்பெரும் சவாலாக அமையும். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் இது குறித்து சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறது.
மாகாண அதிகாரம் சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷைகளை ஒரு போதும் பூர்த்தி செய்யாவிட்டாலும் அவ்வதிகாரத்தை சிங்களப் பேரினவாதிகள் அபகரிப்பதை ஏற்க முடியாது. எனவேதான் அதாவது சிறுபான்மை சமூகங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே நாம் இத்தேர்தலில் குதிக்கத் தீர்மானித்தோம்.
தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாமை அவர்களின் தனிப்பட்ட முடிவென்றாலும் அவர்கள் ஜனநாயக கட்சி என்ற வகையில் மாகாண தமிழ் மக்களை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு கூட்டமைப்புக்குண்டு. இல்லையேல் தமிழ் மக்களின் பெறுமதியான வாக்குகள் சூறையாடப்படும் நிலையேற்படும்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்த தீவிர கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமையும் மட்டக்களப்பு, திருகோணமலை கட்சி முக்கியஸ்தர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
இதன் பின்னர் எமது கட்சியின் நிலைப்பாடு வெளிவரும். பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு மேற்கொள்வது குறித்து ஆராயவும் முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவேயுள்ளது என்றார்.