* ஹக்கீமுடன் பசில் பேச்சுவார்த்தை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பாரிய கூட்டணி அமைத்து களமிறங்கும் முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கு அழைப்பு விடுத்திருப்பதுடன் பதிலளிக்க இருநாள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருக்கிறது.
்முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து சாதகமான சமிக்ஞையை இது தொடர்பாக ஆளும் தரப்பு எதிர்ப்பார்த்திருக்கின்ற போதும் அனுகூலமான பதில் வெளிப்படுத்தப்படாதென்றே அறிய வருகிறது.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஜனாபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையிலான அரசாங்கத் தரப்புக்கும் இடையில் முக்கியமான பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.
இதன் போது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத் தரப்புடன் இணைந்து ஒரே சின்னத்தில் போட்டியிடுமாறு முஸ்லிம் காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகும் வாய்ப்புக் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஏனைய முஸ்லிம் பங்காளிக் கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் முஸ்லிம் காங்கிரஸிற்கு அரசாங்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் அழைப்பு குறித்து உடனடியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதன் போது பதிலளிக்காவிட்டாலும் அடுத்து வரும் தினங்களில் அரசாங்கத்தின் அழைப்பை நிராகரிக்குமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடைபெற்றதாகவும் அவர்களிடமிருந்து சாதகமான சமிக்ஞை வெளிப்படுமென எதிர்பார்த்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்பில் உறுதியான நம்பிக்கை வெளியிடப்பட்டது.
அரசாங்கத் தரப்பானது கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக எவரை நிறுத்துவது, அவர் எந்த சமூகம் சார்ந்தவர் போன்ற தீர்மானங்களை இதுவரை மேற்கொள்ளவில்லையென பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறினார்.
இதேசமயம், அரசாங்க ஆளும் தரப்பு பங்காளிக் கட்சிகளின் முக்கிய கூட்டமொன்றும் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கட்சித் தலைவர்களுடன் முக்கிய பல அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். மற்றுமொரு கூட்டத்தை அடுத்தவாரம் நடத்தவும் இதன் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய கூட்டணி அமைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட காத்திருக்கும் ஆளும் தரப்பானது ஏனைய பங்காளிக் கட்சி களிடமிருந்து ஆயுதக் குழுக்களுடன் இணைந்து செயற்படுதல், நில ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள கடும் போக்காளருடனான உறவு என்பவற்றில் முரண்பாடுகளை எதிர் நோக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.