பலவந்தமாக ஆட்கள் காணாமல் போதல் தொடர்பாக இரகசியமான முறையில் தனது அமைப்பு மேற்கொண்ட கண்டு பிடிப்புகளை தனது அறிக்கையில் தவறான முறையில் பயன்படுத்தியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடுமையாக சாடியுள்ளது.
2007 இன் இரண்டாவது, மூன்றாவது காலாண்டுப் பகுதிகளில் காணாமல் போதலும் விளக்கமளிக்கப்படாத கொலைகளும் தாழ்ந்த மட்டத்திற்கு செல்லும் போக்கு காணப்பட்டதாக ஐ.சி.ஆர்.சி. தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக வெளிவிவகார அமைச்சு தனது சமீபத்தைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்த விடயத்தில் அமெரிக்க தூதரகம் ஐ.சி.ஆர்.சி.யின் இரகசியமான அறிக்கையை பெற்றிருந்ததாகவும் வெளிவிவகார அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இலங்கை அதிகாரிகளுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட இரகசியமான அறிக்கையை பகிரங்கப்படுத்தியதையடுத்து ஐ.சி.ஆர்.சி. கவலையடைந்திருக்கிறது. அத்துடன், ஐ.சி.ஆர்.சி.யின் முழுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் அரசாங்கத்துடனான அதன் பேச்சு வார்த்தைகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு பிழையான விபரத்தை தெரிவித்திருப்பதும் கவலைக்குரியதாகும் என்று ஐ.சி.ஆர்.சி. விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
காணாமற் போதல் தொடர்பான அரசாங்கத்தின் கருத்துகளை சீர்ப்படுத்தும் விதத்தில் ஐ.சி.ஆர்.சி.யின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான குழுவின் தலைவர் ஜாக் குயெஸ் டி மெய் யோ தெரிவிக்கையில்;
"இலங்கையில் நீதிவிசாரணைகளுக்கு புறம்பான படுகொலைகளும் காணாமற் போதலும் பயங்கரமான தன்மையாக காணப்படுவதாகவும் இது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்" என்றும் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நம்பிக்கையான முறையில் நேரடிப் பேச்சு வார்த்தை மூலம் தெரியப்படுத்தியது. இதன் காரணமாக இலங்கையில் காணாமற் போவோர் தொடர்பான எண்ணிக்கையை பகிரங்கப்படுத்தி பகிரங்க விவாதமாக்குவதற்கு நாம் முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.