விஞ்ஞானியும் விஞ்ஞான புனைகதை எழுத்தாளருமான ஆர்தர் சி கிளார்க் (90 வயது) நேற்று புதன்கிழமை அதிகாலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு இதயம் செயலிழந்ததே இவரது மரணத்துக்கு காரணமெனத் தெரிவிக்கும் மருத்துவர்கள், சில வருடங்களாக அவரை சக்கர நாற்காலியில் காலத்தை கழிக்க வைத்த போலியோ நோய் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கக் கூடுமென தொடர்புபடுத்திக் கூறுகின்றனர்.
`2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி' மூலம் அ திகளவுக்கு பிரபல்யம் பெற்ற ஆர்தர் சி கிளார்க் இங்கிலாந்தில் 1917 டிசம்பர் 16 இல் பிறந்தவர். இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் ராடார் நிபுணராக பணிபுரிந்தார். தொடர் பாடல்களுக்கு பூமியை சுற்றிவரும் செய்மதிகளை உபயோகப்படுத்த முடியுமென முதலில் கருத்தினை முன்வைத்தவர்களில் கிளார்க்கும் ஒருவராவார்.அத்துடன் 2000 ஆம் ஆண்டளவில் மனிதனால் சந்திரனுக்கு செல்ல முடியுமென்று 1940 களில் எதிர்வு கூறியவர் ஆர்தர் சி கிளார்க். அச்சமயம் இதனை உபயோகமற்ற கதையென சிந்தனையாளர்கள் நிராகரித்திருந்தனர்.
1969 இல் நீல் ஆம்ஸ் ரோங் சந்திரனில் இறங்கியபோது, கிளார்க்கின் புத்தி ஜீவித்தனமான வழிகாட்டுதலே சந்திரனுக்கு செல்வதற்கு தம்மை வழிநடத்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
ஆர்தர் சி கிளார்க் சுமார் 100 புத்தகங்களையும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அநேகமாக எழுத்தாளர் என்றே அவர் நினைவு கூரப்பட்டார்.
விஞ்ஞானியாக பயிற்சி பெற்ற கிளார்க், விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தையும் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார். வெறும் புனைகதையாக தனது ஆக்கங்களை அவர் படைக்கவில்லை. அவரது தொழில்நுட்பம் சார்ந்தே தூரநோக்கில் இதயத்தில் எப்போதும் இருந்தது மனிதத்துவமேயாகும்.
1964 இல் திரைப்படத் தயாரிப்பாளரான ஸ்ரான்லி குப்ரிக்குடன் இணைந்து திரைப்பட வசனம் எழுதினார். அது முன்னர் வெளிவந்த
விஞ்ஞானப்புனைகதைகளிலும் பார்க்க பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி(2001: A space odyssey) அவருக்கு அதிக புகழை ஈட்டிக் கொடுத்தது.
1948 இல் அவர் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டதே இத்திரைப்படமாகும். மனிதப்பரிமாணம், தொழில்நுட்பம், பிரக்ஞைகள் என்பனவற்றைக் கருப்பொருளாக இது கொண்டிருந்ததுடன் முன்னொருபோதுமில்லாத அளவுக்கு சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டதாக இப்படம் விளங்கியது.
தனது தலைமுறையில் மிகவும் புகழ்பெற்ற விஞ்ஞானப்புனைகதை எழுத்தாளர்கள் மூவரில் ஒருவரென்ற புகழைப் பெற்றவர் கிளார்க்.
ரஷ்யாவில் பிறந்த ஐசன் அசிமோவ் (1992 இல் இறந்தார்). மிசூரியைச் சேர்ந்த ரொபேட் ஏ றெய்ன்லெய்ன் ஆகியோர் மற்றைய இருவருமாவர்.
கடந்த 60 வருடங்களாக பிரசுரங்களில் தடம்பதித்துவந்த கிளார்க் இத்துறையில் செலுத்திய பங்களிப்பு அவருக்கு தனித்துவமான இடத்தை கற்றறிந்தோர் குழாமில் பெற்றுக் கொடுத் திருக்கின்றது என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்டு செயற்படும் இலக்கியத்துறை முகவர் ரஸல் கலன் கூறியுள்ளார்.
தனது பிந்திய நாவலான த லாஸ்ட் தியரத்தை ( The Last Theorem) சில நாட்களுக்கு முன்பே கிளார்க் பூர்த்தி செய்திருந்தார்.
விண்வெளிக்கு உயர்த்தும் திட்டம் தொடர்பாகவும் அவர் செயற்பட்டார்.
அண்டவெளியின் பொற்காலம் தற்போது ஆரம்பமாகியிருப்பதாக அவர் எதிர்வுகூறியிருந்தார்.
அடுத்த 50 வருடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பூமியைச் சுற்றிப் பயணம் செய்வதுடன் பின்னர் சந்திரனுக்கும் அதற்கப்பாலும் செல்வார்கள் . விண்வெளிப் பயணமும் விண்வெளி சுற்றுலாவும் ஒரு நாள் சாதாரண நிகழ்வாகி விடும் என்றும் கிளார்க் கூறியிருந்தார்.
இதேவேளை, ஆர்தர் சி கிளார்க்கின் இறுதிக்கிரியை எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
தனது இறுதிக்கிரியை தனிப்பட்ட நிகழ்வாகவும் மதச்சார்பற்றதாகவும் இருக்க வேண்டும் என்று ஆர்தர் சி கிளார்க் எழுத்து மூல அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.
எந்தவிதமான மதக்கிரியைகளும் இருக்கக்கூடாதெனவும் எந்தவிதமான மத நம்பிக்கைகளும் தொடர்புபட்டதாகவும் எனது இறுதிக்கிரியை இருக்கக்கூடாதெனவும் அவர் எழுதியுள்ளார்.