இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் இந்திய பிரிமியர் லீக்குக்கு(ஐ.பி.எல்) சர்வதேச கிரிக்கட் சபை (ஐ.சி.சி) அங்கீகாரம் அழித்துள்ளது.
எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு போட்டியாக தொடங்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கட் லீக்கிற்கு (ஐ.சி.எல்) அங்கீகாரம் அளிக்க ஐ.சி.சி. மறுத்து விட்டது.
ஐ.சி.சி நிர்வாக் குழுவின் இரண்டு நாள் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவராக பொறுப்பேற்கவுள்ள டேவிட் மார்க்கன் இதனை தெரிவித்தார்.
இங்கிலாந்தில் நடாத்தப்படும் கவுண்டி சாம்பியன்ஷிப் போல் இந்திய பிரிமியர் லீக்(ஐ.பி.எல்) அதிகாரப்பூர்வமானது என்றார். ஆனால் ஐ.சி.எல்லை அங்கீகரிக்க இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை மறுத்துவிட்டதால், அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றார்.
இந்திய பிரிமியர் லீக் அணிகள் தனியாருக்கு சொந்தமானது என்பதில் சில பிரச்சனைகள் உள்ளது என்ற போதிலும் அதில் பல்வேறு நலன்களும் இருப்பதாக டேவிட் மார்க்கன் தெரிவித்தார்.
ஐ.பி.எல்லின் உரிமையாளர் என்ற முறையில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை ஐ.சி.சி அங்கத்தினர்களுடன் விளையாடுவதற்கு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
இந்திய பிரிமியர் லீக்கிற்கென தனியாக நடத்தை விதிமுறைகளையும், ஊழலுக்கு எதிரான மற்றும் ஊக்க மருந்து பயன்படுத்துவது தொடர்பான நடத்தை விதிமுறைகளையும் வகுக்குமாறு சர்வதேச கிரிக்கட் சபை கேட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய பிரிமியர் லீக்கின் செயற்பாடுகளை ஐ.சி.சி கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.