* பாதுகாப்பைக் காரணம் காட்டி அவுஸ்திரேலிய அ ணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததையடுத்து அங்கு பங்களாதேஷ் அணி சென்று விளையாட இருக்கிறது. ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் பங்கேற்கவுள்ளது. லாகூர், முல்தான், பைசலாபாத், கராச்சி ஆகிய இடங்களில் இந்தப் போட்டிகள் நடக்கிறது.
* இந்திய ஹொக்கி அணி 80 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறாததால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இந்தநிலையில், இழந்த பெருமையைத் தூக்கி நிறுத்த மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்திய ஹொக்கி சம்மேளன நிர்வாகிகள் நேற்று முன்தினம் 2 ஆவது நாளாகத் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர் . ஹொக்கி சம்மேளனத் தலைவர் கே.பி.எஸ்.கில்.பயிற்சியாளர் ஜோகிம் கர்வாலோ மற்றும் சில முன்னாள் ஒலிம்பிக் வீரர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
* அவுஸ்திரேலிய தொடரில் ஓட்டங்களைக் குவிக்க கவுதம் கம்பீரை தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நீக்கியிருக்கிறார்கள். அதேசமயம் அவுஸ்திரேலியாவில் சரியாக ஆடாத யுவராஜ்சிங்கை சேர்த்திருக்கிறார்கள். இது முட்டாள்தனமான தேர்வு என்று முன்னாள் தேர்வாளர் கீர்தி ஆசாத் சாடியிருக்கிறார்.
* அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய நடுவர் டரல் ஹேர் மீண்டும் ஐ.சி.சி.யின் முதன்மை நடுவர் குழுவில் (எலைட் பனல்) நியமிக்கப்பட்டிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு ஓவலில் நடந்த டெஸ்டில் பந்தைச் சேதப்படுத்திய பாகிஸ்தான் வீரர்கள் மீது புகார் கூற அவர்கள் விளையாட மறுத்ததால் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஹேர்.
ஆனால், அவர் கூறிய புகார் தவறு என்று தெரியவந்ததால் நடுவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னர் 6 மாத காலம் உறுப்பு நாடுகளின் போட்டிகளில் நடுவராக செயற்பட்டார். இதில் திருப்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து 18 மாத கால இடைவெளிக்குப் பின் அவரை மீண்டும் சர்வதேச நடுவர் பணிக்கு ஐ.சி.சி அழைத்துள்ளது.