* ஆயதம் ஏந்தாதோருக்கு எம்மிடம் தீர்வுகள் இல்லையென்றால் மாவீரர் குடும்பங்கள் உயர்வாகப் போற்றப்படும்
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வன்னியில் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தோம், கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் முடிவடைந்துள்ளன. இது ஒரு நீண்ட காலமாகும். இதன் மூலம் வன்னிப் படை நடவடிக்கை அவ்வளவு இலகுவானதல்ல என்பது புலனாவதாக முன்னாள் இராணுவத்தின் ஆளணிகளின் பொறுப்பதிகாரியும் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா `சண்டே லீடர்' வார ஏட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியின் விபரம் வருமாறு:-
கேள்வி : கிழக்கை மீட்டெடுத்த போது காணப்பட்ட அதே உத்வேகம் வடக்கை மீட்டெடுக்கும் போர் முன்நகர்வுகளில் காணப்படவில்லை. இதற்கான பிரதான காரணமாக நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள்?
பதில் : கிழக்கு எப்போதும் விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய கோட்டையாக காணப்படவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த 1992 ஏப்ரல் 22 முதல் 1993 செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் நாங்கள் கிழக்கை மீட்டெடுத்தோம். ஏனெனில் அந்த இராணுவ நடவடிக்கைகளின் போது சிறப்பு நடவடிக்கை தளபதியாக பணியாற்றினேன். நாங்கள் முக்கியமான கிழக்குத் தலைவர்களை வெளியேற்றினோம். கருணா, பதுமன் மற்றும் பிள்ளையான் போன்றோர் வன்னிக்கு தப்பியோடினர். ஒக்ரோபர் மாதம் எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி தேர்தல்களை நடத்தினோம். படையினரையும் பொலிஸாரையும் தவிர வேறு எவரும் ஆயுதம் தரித்திருக்கவில்லை.
அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலையும், அதே ஆண்டின் நவம்பர் மாதம் அரச தலைவர் தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தினோம்.
இதனை உற்று நோக்கினால் வன்னியில் புலிகளுக்கு இருக்கும் செல்வாக்கு எப்போதும் கிழக்கில் காணப்படவில்லை என்பது புலனாகும்.
வன்னியில் போர் முன்நகர்வுகளை மேற்கொள்வதில் ஏற்படும் தமதத்திற்கு காரணம் அங்கு புலிகள் மிக வலுவாக தம்மை நிலைப்படுத்திக் கொண்டுள்ளனர். அநேகமான முக்கிய படையணிகள் வன்னியை மையமாகக் கொண்டுள்ளது.
இம்ரான் - பாண்டியன், சார்ள்ஸ் அன்ரனி, அகிலா போன்ற படையணிகளைக் குறிப்பிடலாம்.
மேலும், அநேகமான தன்னார்வப் படையணிகளும் வன்னியில் காணப்படுகின்றன. உதாரணமாக இளைய படை, மக்கள் படை மற்றும் வீட்டுக் காவல் படையணிகளைக் குறிப்பிடலாம். இந்த வலுவான அமைப்பு கிழக்கில் புலிகளுக்கு இல்லை. வன்னியைப் பொறுத்த மட்டில் அவர்கள்மிகவும் வலுவான பலம் பொருந்திய நிலையில் காணப்படுகின்றனர்.
இதனால், சற்று கால தாமதம் ஏற்படும். அதுநீண்ட காலமாக இருக்கலாம். பத்திரிகைளின் மூலம் நான் அறிந்த விடயங்களின்படி நாங்கள் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வன்னியில் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.
கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் முடிவடைந்துள்ளன. இதுவொரு நீண்டகாலமாகும். இதன் மூலம் வன்னிப் போராட்டம் அவ்வளவு இலகுவானதல்ல என்பது புலனாகிறது.
மேலும், ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கைகளை நினைவுபடுத்தினால் 1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த இராணுவ நடவடிக்கைகள் தொடங்கின. 1999 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.
கேள்வி : தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், சுமார், 3,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்படுவார்கள் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அடுத்த தலைமுறைக்கு இந்தப் போரைக் கொண்டு செல்லமாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். இதுவரையில் 2,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் மே மாதமளவில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியுமா?
பதில் : பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் வரையில் 7,152 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜனவரி முதலாம் நாள் முதல் பெப்ரவரி 18 ஆம் நாள் 1,609 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
MCNS C? uP-??-P-?US A? 1,663 ? ?P??-??-?m-k??-u?-Pz ?u?-?U-P?-?-k-Q-?x.
இந்தப் புள்ளி விபரங்களுக்கு இடையில் முரண்பாடு காணப்படுகிறது. இந்தப் புள்ளி விபரங்கள் நம்பத்தகுந்தவை என்றால் போர் வெகுவிரைவில் முடிவடையும். இந்தப் புள்ளி விபரத் தரவுகளில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. நாங்கள் போர்க்களத்தில் இருக்கும் போது அமைச்சர்களும், முக்கிய அதிகாரிகளும் போலியான தகவல்களை வெளியிடுவதனை பார்த்திருக்கிறோம். இம்முறை அவ்வாறானதொரு நிலைமை இருக்காது என நான் வேண்டிக்கொள்கிறேன்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதனைப் போன்று சில தகவல்கள் 7,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. அது உண்மையானால் மிக இலகுவாக போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும், 1,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரமே இன்னமும் எஞ்சியிருக்க வேண்டும். எனினும், என்னுடைய கருத்துப்படி, வலிமை மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் இதுவரையில் போர்க்களத்தில் குதிக்கவில்லை. என்னுடைய அனுமானம் சரியாயின் இந்தப் போர் இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும். முன்னாள் ஜெனரல், நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் பற்றுடைய ஒரு நபர் என்ற ரீதியில் நான் உண்மையாக எமது படைத்தரப்புக்கு மே மாதமளவில் போரை முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பு கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அவ்வாறு இல்லாது இந்த போர் நீடித்தால் அது அனைவருக்கும் பாதிப்பாக அமையும். குறிப்பாக படை வீரர்களை அது வெகுவாக பாதிக்கும்.
கேள்வி : அரசாங்கத் தரப்பின் தந்திரோபாயங்களில் ஏதாவது குறைபாடுகளை நீங்கள் நோக்குகின்றீர்களா? தற்போது இன்னும் ஒன்றரை வருட காலம் போரை முடிக்கத் தேவை என்று குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறு போரை முடிவுக்குக் கொண்டுவரும் காலக்கெடு மாற்றியமைக்கப்படுவது எவ்வாறு போர்க்களத்தில் போராடும் சாதாரண படைவீரனை எந்தளவிற்கு பாதிக்கும்?
பதில் : நீண்டகாலம் போர்க்களத்தில் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு உயர் அதிகாரி என்ற வகையில் நான் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். போர் இழுத்தடிக்கப்பட்டால் இரண்டு விடயங்கள் நிகழும், தற்போது இலங்கையில் இரண்டு நெருப்புகள் கொழுந்து விட்டு எரிகின்றன. ஒன்று போர் முனையின் போர் நெருப்பு மற்றையது வயிற்றுப் பசியால் ஏற்படும் நெருப்பு. போர்க்களத்தில் காட்டப்படும் அதீத சிரத்தை வயிற்றுப் பசிக்கு வழிகோலும். இந்த நிலைமை யுத்த நெருப்பை பாதிக்கும். இந்த இரண்டு நிலைமைகளையும் சமமான முறையில் பேணப்பட வேண்டும்.
போர் நீடித்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம், 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2008 பெப்ரவரி வரை போர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போர் நீடிக்க, நீடிக்க படைவீரர்கள் உடல் மற்றும் உளரீதியாக பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவர். இந்த இரண்டு பிரச்சினைகளுடன் வீட்டுப் பிரச்சினைகளும் சேர்ந்து படைவீரர்களை க அழுத்தமாக பாதிக்கும்.
இந்த நிலைமைகளின் கீழ் போர்க்கள நடவடிக்கைகளை முன்னெடுத்தால் படைவீரர்கள் பூரண கவனத்தை போரின் மீது செலுத்த முடியாத நிலை தோன்றும். இதன் மூலம் படைவீரர்கள் அழுத்தங்களும், சுமைகளும் நிறைந்த நபராக மாறக்கூடும்.
வன்னிப் போர்கள முன்நகர்வுகளை வன்னிப் பிரதேசத்திற்கு மட்டும் வரையறுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. கொழும்பிலும் தெற்கிலும் குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட பல சம்பவங்கள் நிகழ்கின்றன. இது பரவக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்த நிலைமை மிக நிதானமாக நோக்கப்பட வேண்டிய நிலையாகும்.
இராணுவத் தளபதி மே மாதமளவில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என உறுதியாக சூளுரைத்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன். இந்தக் காலக்கெடு எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது. குறிப்பாக போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு இது அதிக நன்மை பயக்கும். எனினும் இப்போது எவரேனும் இன்னும் ஒன்றரை வருடம் போரை முடிவுறுத்த கால அவகாசம் தேவை எனக் குறிப்பிட்டால் அது படைவீரர்களின் உடல் உள நிலைமைகளை அபரிமிதமாக பாதிப்பதுடன், பொருளாதார சுமையும் வெகுவாக அதிகரிக்கும்.
கேள்வி : இராணுவத்தினர் விதித்த காலக்கெடு எந்தளவுக்கு யதார்த்தமானது? உங்கள் காலத்தில் இராணுவ அதிகாரிகளா அல்லது அரசியல் தலைமைத்துவங்களா இவற்றைத் தீர்மானித்தன?
பதில் : ஈராக் மீது அனைத்துலகப் படைகள் தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழித் தாக்குதல்களை மேற்கொண்ட போது காலக்கெடு விதித்ததாக எனக்கு நினைவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றே அவை தெரிவித்தன. எந்தவித காலக்கெடுவையும் விதிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த போதும் அவை காலக்கெடு எதனையும் விதிக்கவில்லை.
காலக்கெடு விதிப்பது யதார்த்தத்திற்கு ஒவ்வாத நிலையாகும். உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் காலஞ்சென்ற முன்னாள் அரச தலைவர் ரணசிங்க பிரமேதாச நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தேசித்த போது, படைத்தரப்பு அதிகாரிகள் மற்றும் அரச தலைவரின் ஆலோசகரும் இணைந்து இரண்டு மாதக் காலக்கெடுவை விதித்தனர். அந்த சந்தர்ப்பத்தின் போது நான் தனித்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
நாங்கள் ஒரு இரண்டு வருட காலத்தில் இதனை மேற்கொள்ள முயற்சிக்கலாம் என தெரிவித்தேன். உண்மையில் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கைகள் 1993 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. எங்கள் நிலைகளைத் தக்க வைத்துக்கொள்ள போதியளவு கால அவகாசம் காணப்பட்டது.
எமது தரப்பு இழப்புக்களை குறைத்து, எதிரிகளின் இழப்புக்களை அதிகரிக்க கூடியதாக இருக்கும். இதேபோன்று,போர் முன்நகர்வுகள் நீடிக்கப்பட்டால் உயிர்ச்சேதங்களும் அதிகரிக்கும். கடந்த மாதம் 104 படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன், 882 பேர் காயமடைந்துள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாக நான் பத்திரிகைகள் வழியாக அறிந்து கொண்டேன். இது ஒரு மாதத்திற்கான புள்ளி விபரம். அப்படியானால் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கும், உண்மையில் இது நோக்கப்பட வேண்டிய ஒன்று.
எங்களது பிரதான இராணுவச் சொத்து முப்படைகளும், பொலிஸாரும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வெறும் ஆயுதங்களை நம்பி நாம் போர் செய்ய முடியாது. படைத்தரப்பிற்கு பாரதூரமான இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அமைச்சரின் அறிக்கை மூலம் தெரியவருகிறது. எனவே, இந்தப் போர் நீடிக்கப்பட்டால் அது பாதகமான சூழ்நிலையை தோற்றுவிக்கும். இந்தப் போர் முடிவுக்காலம் யதார்த்தத்திற்கு புறம்பானதொன்று.
செப்டெம்பர் மாதமளவில் காலநிலை மாற்றங்கள் ஏற்படும். காலநிலைக் காரணிகளும் துருப்பினரை பாதிப்படையச் செய்யும். குறிப்பாக மலேரியா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். போர் நீடிக்கப்பட்டால் இந்த நிலைமைகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியேற்படும்.
போரை முன்னெடுப்போம் என்று கூறுவது மிக இலகுவான காரியம். எனினும், போர்க்களத்தில் போராடிய ஒருவன் என்ற வகையில் அது எவ்வளவு கடினமான காரியம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் விடுதலைப் புலிகள் இந்தப் போரை நீடிப்பது ஒரு போர் தந்திரோபாயமாகும். இந்த நிலைமை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமையும். (நாளை தொடரும்)