பாகிஸ்தான் பிரதமர் தெரிவிற்கான போட்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் மஹ்தும் அமின் பாஹிம் தொடர்ந்து போட்டியிடுவதால் பிரதமரை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் இழுபறிநிலை காணப்படுகிறது.
இதேவேளை, பிரதமர் வேட்பாளர் யாரென்பதனை முடிவு செய்துவிட்டதாகவும் அதனை பாராளுமன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுத்த பின்னரே அறிவிக்க முடியுமெனவும் ஆசிப் அலி சர்தாரியின் நெருங்கிய நண்பர் ஒருவரும் மூத்த தலைவர்களில் ஒருவரும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), அவாமி தேசிய கட்சி, ஜமியாத் உலோமா-இ-இஸ்லாம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளன.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி, துணைத்தலைவர் மஹ்து அமின் பாஹிம், யூசுப் ராஜா கிலானி உள்ளிட்ட 5 பேர் பிரதம பதவிக்கான வேட்பாளர்களாக பரிசீலனையில் இருந்தனர்.
இறுதியில் சர்தாரி, பாஹிம் ஆகிய இருவரில் ஒருவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்படும் சூழ்நிலை இருந்தது.
இந்நிலையில் திங்கட்கிழமை சர்தாரியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஹிம் முன்மொழிந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து சர்தாரிதான் பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் என்று உறுதியாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டார். ஆனாலும் பாஹிம் இன்னமும் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளார் என கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் சூசகமாக தெரிவித்தார்.
பிரதமரை தேர்வு செய்வதற்கு இன்னும் காலம் உள்ளது. அதற்கு அவசரமும் இல்லை, கவலையும் இல்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை உடனடியாக அறிவிக்க முடியாது. கட்சிதான் அது குறித்து முடிவு எடுக்கும் எனவும் அந்த தலைவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மூத்த தலைவர்களில் ஒருவர், சர்தாரியின் நெருங்கிய நண்பருமான நபீல் காபுல் மேலும் தெரிவிக்கையில்;
பிரதமர் வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு விட்டது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை என்னால் உறுதியாக தெரிவிக்க முடியாது.
பாராளுமன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்த பின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். பிரதமர் வேட்பாளரை எங்கள் கட்சி மட்டுமே முடிவு செய்து விட முடியாது.
கூட்டணி ஆட்சி என்பதால் மற்ற கட்சிகளிடம் கலந்து பேசி பிரதமர் வேட்பாளரை அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்களில் ஒருவரான சௌத்ரி அகமது முக்தர், பாராளுமன்றத்தில் பாஹிம் தலைமையில் கூடிய கட்சிக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தார். பாஹிம் தலைமையில் கூட்டம் நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ அறிவிப்பாரென தெரிவிக்கப்படுகிறது.
அடுத்து கூடவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பரூகத்துல்லா பாபர் புதன்கிழமை தெரிவித்தார்.
இதையடுத்து பிரிட்டனில் இருந்த பிலாவல் உடனடியாக பாகிஸ்தான் வரவழைக்கப்பட்டார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பிலாவல் புதன்கிழமை கராச்சிக்கு வந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் மக்களவையின் முதல் பெண் தலைவராக சர்தாரியின் பெண் நண்பரான பாமிதா மிர்சா புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.