அமெரிக்கா முழுவதிலும் ஈராக் மீதான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 200 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பின் ஐந்தாண்டு பூர்த்தி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட இவர்கள் போக்குவரத்துக்கு தடைகளை ஏற்படுத்தியதுடன், அரச அலுவலகங்களின் பணிகளையும் முடக்க முயற்சித்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு வரி வருமானத் திணைக்களத்தின் நுழைவாயிலில் தடையினை ஏற்படுத்திய 32 ஆர்ப்பாட்டக்காரர்கள் வாஷிங்டனில் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, காங்கிரஸ் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஈராக் மீதான போர்ச் செலவீனத்திற்கு பிரதான காரணியாக விளங்கும் வரி வருமானத் திணைக்களத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதாகவும் அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸாருக்கு சுமார் ஒரு மணித்தியாலம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈராக் மீதான போருக்கு நீண்ட காலமாகவே எதிர்ப்புத் தெரிவித்து வரும் சான்பிரான்ஸிஸ்கோவில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டமை, கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமை மற்றும் போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளில் 143 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ் ஆர்ப்பாட்டக்காரர்கள் புஷ்ஷும் செனியும் தோல்வியடைந்துள்ளனர். புஷ்ஷும் செனியும் சிறையில் இருக்க வேண்டியவர்கள் எனச் சத்தமிட்டதுடன், கொலைகளை நிறுத்து, போர் எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற பதாதைகளையும் தாங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
2003 இல் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்ததிலிருந்து இதுவரை இலட்சக்கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், 4000 அமெரிக்கப் படைவீரர்களும் பலியாகியுள்ளனர். அத்துடன் இதற்காக 500 பில்லியன் டொலர்களை அமெரிக்கா செலவழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.