* திரிபுபடுத்தப்பட்ட பொய்; நிராகரிக்கிறார் ஊடக அமைச்சர் யாப்பா
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை அரச தொலைக்காட்சி நிறுவனத்தை நிர்வகிக்க நியமித்திருப்பது பல வருடங்களாக இடம்பெறாததொரு நடவடிக்கையெனவும் இது ஊடகத்துறையை இராணுவ மயமாக்குவதற்கான அறிகுறியென்றும் உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனை அரசாங்கம் திரித்துக் கூறப்படும் பொய்யென நிராகரித்திருப்பதுடன் தொலைக்காட்சி நிறுவன முகாமைத்துவ பலவீனத்தை சீர்படுத்த முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சுனில் சில்வா உதவுவாரெனத் தெரிவித்திருக்கிறது. ஆனால், கடந்த 20 வருடங்களாக தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இராணுவ அதிகாரியும் பொறுப்பாக இருந்ததை நாங்கள் பார்க்கவில்லை. இது நாட்டை இராணுவமயமாக்குவதன் ஓரங்கமாகும். இது அரசாங்கம் தயார்படுத்துவதன் ஒரு பகுதியென்று கூறமுடியும்.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை அவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென சுதந்திர ஊடக இயக்கப் பேச்சாளர் சுனந்த தேசப்பிரிய ராய்ட்டருக்கு நேற்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொலைக்காட்சி நிறுவனம் இராணுவமயமாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் புனையப்படும் பொய்யென ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனமொன்றை எவ்வாறு இராணுவமயப்படுத்த முடியும்? அவர் (சுனில் சில்வா) ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாக இருந்தாலும் சிறந்ததொரு நிர்வாகியாவார் . அத்துடன் நிர்வாகத்தைப் பலப்படுத்த இராணுவம் அவர்களுக்கு உதவக்கூடும் என்று அமைச்சர் யாப்பா ராய்ட்டருக்குத் தெரிவித்திருக்கிறார்.