ரூபவாஹினி கூட்டுத்தாபன நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரி யொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட மேலதிக பிரதி இயக்குநர் நாயகம் (நிர்வாகம்) பதவிக்கே ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சுனில் சில்வா உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் சிபார்சின் பேரிலேயே இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டு, நேற்று வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்யவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஜெனரல் சுனில் சில்வா கடைசியாக இராணுவ சிக்னல் படையணியின் கட்டளைத் தளபதியாகவும் இராணுவத்தில் இடமாற்றங்கள் மற்றும் புதிதாக ஆட்களைச் சேர்ப்பதற்கான பிரிவின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
ரூபவாஹினி ஒளிபரப்பு உட்பட கூட்டுத்தாபன செயற்பாட்டை முற்று முழுதாக ஸ்தம்பிக்கச் செய்யும் விதத்தில் எதிர்காலத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தால் அல்லது தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் அதனைச் சமாளிக்கும் நோக்கிலேயே மேஜர் ஜெனரல் சுனில் சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.