* ஷ்ரீசாந்த் கூறுகிறார்
களத்தில் திடீரென அமைதியாக நடந்து கொள்வதற்கு ஐ.சி.சி.தான் காரணம் என்று ஷ்ரீசாந்த் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 25 வயதான ஷ்ரீசாந்த் ஆக்ரோஷத்துக்கு பெயர் போனவர். களத்தில் இறங்கி விட்டால், பொங்கி எழுந்து விடுவார். அவருக்கும் ஏதாவது ஒரு வீரருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டேயிருக்கும். இதனால் ஐ.சி.சி.யின் நடவடிக்கைக்கும் உள்ளாகியிருக்கிறார்.
அவுஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா வந்த போது, ஷ்ரீசாந்த்துக்கும், அவுஸ்திரேலிய வீரர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. ஆனால் சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த ஒரு நாள் தொடரில் ஷ்ரீசாந்திடம் இத்தகைய ஆவேசம் குறைந்திருந்தது. ஷ்ரீசாந்தின் `சாந்தத்தை' பார்த்து அவுஸ்திரேலிய வீரர்களே ஆச்சரியப்பட்டார்கள். இந்த நிலையில் தனது திடீர் அமைதிக்கு காரணம் என்ன என்பதை ஷ்ரீசாந்த் டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பின் வெளியிட்டார்.
இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகாசனம் நான் அமைதியாக செயல்பட உதவிகரமாக இருக்கிறது. மேலும், ஏதேனும் விபரீதத்தை ஏற்படுத்தினால், ஐ.சி.சி.யால் குறைந்தது 3 டெஸ்டில் விளையாட எனக்கு தடை விதிக்கப்படலாம். இதை மனதில் வைத்துக் கொண்டு களத்திலிறங்கும் போது கவனமாக செயல்படுகிறேன். நான் இப்போது சாந்தமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
அவுஸ்திரேலியாவில் எதிரணி வீரர்களுடன் மோதல் சம்பவங்கள் நடந்த போதெல்லாமல், முட்டாள்தனத்துக்கும் தைரியத்துக்கும் மிகச்சிறிய இடைவெளி தான் உள்ளது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இதனால் ஒவ்வொரு முறை கோபமடையும் போதெல்லாம் உடனடியாக என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன்.
தோள்மூட்டு காயத்துக்கும் நான் சத்திரசிகிச்சை செய்திருந்தால் குறைந்தது 6 மாத காலம் விளையாட முடியாமல் போயிருக்கும்.ஆனால் 21 நாட்கள் நான் எடுத்துக் கொண்ட ஆயுர்வேத சிகிச்சை, அவுஸ்திரேலியாவில் நடந்த தொடருக்கு உடல்தகுதி பெற மிகவும் உதவியாக இருந்தது.
தென்ஆபிரிக்காவுடனான டெஸ்ட் தொடர் எனக்கு கடினமாக இருக்கும். எனக்கு மட்டுமல்ல, எல்லா வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இது பொருந்தும். இந்த சீசனில் தொடர்ந்து பெற்ற வெற்றியால், தென்ஆபிரிக்க தொடரிலும் வெற்றி பெற வேண்டுமென்ற நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். நெருக்கடிகள் அதிகமாக இருக்கும் போது தான், நாங்கள் மேலும் சிறப்பாக விளையாடுவோம் என்று நினைக்கிறேன். குறிப்பிட்ட வீரருக்கு எதிராக எந்த இலக்கையும் நான் வைக்கவில்லை. அவர்கள் (தென்ஆபிரிக்கா) எல்லோருமே சிறந்த வீரர்கள் தான்.