பசுபிக் லைப் ஓப்பன் டெனிஸ் தொடரில் நான்காவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, சுலோவாக்கியாவின் டேனியலா ஹன்டுசோவாவிடம் 6-1,7-6, (7/4) தோல்வியடைந்து ஒற்றையர் பிரிவிலிருந்து வெளியேறினார்.
கலிபோர்னியாவில் (அமெரிக்கா) இன்டியன் வெல்ஸ் நகரில் பசுபிக் லைப் ஓப்பன் டெனிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. உலகின் முன்னணி வீரர்களும் வீரர்கனைகளும் இதில் பங்கேற்கின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுலோவாக்கியாவின் ஹன்டுசோவா இருவரும் நான்காவது சுற்றில் மோதினர்.
மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடிய சானியாவை முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் ஹன்டுசோவா எளிதாக வென்றார். இரண்டாவது செட்டில் கடும் சவாலை அளித்த சானியாவை சமாளிக்க முடியாமல் ஹன்டுசோவா திணறினார். இருவரும் 6-6 என்று சமநிலை வகித்த நிலையில், ரை பிரேக்
கர் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 7/4 என்ற கணக்கில் ஹன்டுசோவா வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஹன்டுசோவா, ரஷ்யாவின் ஷரபோவாவை எதிர்கொள்கிறார். காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறிய சானியா, தன்னுடைய தோல்வி குறித்து கூறுகையில், "மணிக்கட்டை அசைக்க முடியாதளவுக்கு அதிக வலி இருந்தது. மணிக்கட்டில் சத்திரசிகிச்சை செய்வதை தவிர்க்கவே விரும்புகிறேன். டெனிஸ் ராக்கெட்டை பிடிக்கும் முறையையும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. இரட்டையர் பிரிவு காலிறுதிக்குள் சிறிய சிகிச்சைக்குப் பின் நிலைமை சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்" என்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், அவுஸ்திரேலியாவின் பால் ஹான்லி ஜோடியும் கனடாவில் டேனியல் நெஸ்டர், சேர்பியாவின் நேனட் ஜிமோன்ஜிக் ஜோடியும் மோதின. இதில் பயஸ் ஜோடி 2-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நவுல்ஸ் ஜோடி, இஸ்ரேலின் ஜோனதன் எர்லிச், ஆன்டி ராம் ஜோடியுடன் மோதவுள்ளது.