* ஐ.சி.சி. அறிவிப்பு
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அங்கிருந்து இலங்கைக்கு மாற்றப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் கிண்ணம் எனப்படும் மினி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியா, இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஆனால், பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்ட பின் பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்தப் போட்டிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் வரலாமென்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.
இதையடுத்து ஒரு வேளை பாகிஸ்தானில் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் இந்தப் போட்டியை இலங்கைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டிக்கு மாற்றீடாக இலங்கை தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நேற்று முன்தினம் அறவித்தது.
ஆனால், தற்போது வரை போட்டி பாகிஸ்தானில் தான் நடக்கவிருக்கிறது. அதில் மாற்றம் செய்யும் எண்ணமில்லை என்றும் ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.
அவுஸ்திரேலியா. நியூசிலாந்து அணிகள் மட்டுமே பாதுகாப்பு பிரச்சினையில் அதிக கவனம் செலுத்துகின்றன. இதே காரணத்துக்காக இந்த மாத இறுதியில் பாகிஸ்தானில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப் பயணத்தை அவுஸ்திரேலியா தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கான இடங்கள் பற்றி இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஜூன் மாதம் ஐ.சி.சி. பிரதிநிதிகள் குழு பாகிஸ்தான் சென்று ஆய்வு நடத்தவுள்ளன. அதைத் தொடர்ந்து போட்டிக்கான இடங்கள் தெரிவு செய்யப்படும்.