திபெத் தலைநகர் லாசாவில் சீனாவுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்திருக்கும் சீன அதிகாரிகள் திபெத்திற்கு வெளிப்புறத்திலும் குழப்பநிலை பரவியுள்ளதை முதல் தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் 170 ஆர்ப்பாட்டக்காரர்கள் சரணடைந்துள்ளதாகவும் சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
லாசாவில் அமைதி திரும்பியுள்ள போதும் பாதுகாபபு படையினர் தொடர்ந்தும் அதிகளவில் குவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சீன ஆட்சிக்கெதிரான திபெத்திய கிளர்ச்சியை நினைவு கூருமுகமாக கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் சீனாவும் திபெத்தும் வெளியிடும் தகவல்கள் ஒன்றுக்கொன்று பெரிதும் வேறுபட்டுள்ளன.
இக் குழப்ப நிலை தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு மேற்குலக செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மோதல்களில் ஈடுபட்டதுடன் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்த 24 பேரை பொலிஸார் கைது செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ள திபெத்தின் உத்தியோகபூர்வ நாளேடொன்று இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளது.
170 பேர் சரண் அடைந்துள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ள போதும் இவ் எண்ணிக்கையினுள் கைது செய்யப்பட்ட 24 பேரும் உள்ளடங்குகின்றனரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.
நகர் வழமைக்கு திரும்பும் நடவடிக்கைகளில் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அங்கிருக்கும் ஜேர்மனிய செய்தியாளரொருவர் ஆனால் தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் வீடுகளில் புகுந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.