நேபாளத்தில் தேர்தலுக்கு முன்பு இடம்பெற்று வரும் வன்முறைகளில் இதுவரை வேட்பாளர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் ஏப்ரல் 10 ஆம் திகதி அரசியல் நிர்ணயசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல்நாள் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
நேபாள ஜன்மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், ரோப்லா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் மாவட்டத் தலைவர்கள் டீக் பகதூர் புதா மற்றும் பக்டா பகதூர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என சி.பி.என். மாவோயிஸ்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
ரோப்லா மாவட்டம் மாவோயிஸ்ட்டுகள் வலிமையாக உள்ள பகுதியாகும். நேபாளத் தேர்தலை பார்வையிட வந்துள்ள ஐ.நா. முதன்மை கண்காணிப்பாளர் ஜான் முல்டர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தேர்தல் நேர்மையாகவும் , அமைதியாகவும் நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
இச்சம்பவத்தையடுத்து வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பை பலப்படுத்த உட்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் தேர்தல் நியாயமாக நடைபெற அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து உதவிகளும் செய்யப்படும் என நேபாளத்திற்கான இந்தியத்தூதர் சிவசங்கர் முகர்ஜி புதன்கிழமை காத்மண்டுவில் தெரிவித்தார்.