ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளன.
ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த போட்டி (2006) நடைபெறவில்லை. இந்தநிலையில், 9 ஆவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூலை 6 ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது.
பாதுகாப்புக் காரணமாக இந்தப் போட்டி தள்ளிப்போடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 அணிகளும் கலந்து கொள்வதை உறுதி செய்து இருப்பதால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் சபைத் தலைமை நிர்வாகி அஷ்ரபுல் ஹூக் அறிவித்துள்ளார்.
இந்தப்போட்டியில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் `ஏ' பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் `பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகளும் இடம்பிடித்து இருக்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பிடித்துள்ள அணியுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். இதில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.
இந்தப் போட்டியில் 10 ஆட்டங்கள் கராச்சியிலும் 3 ஆட்டங்கள் லாகூரிலும் நடக்கிறது. அனைத்து ஆட்டங்களும் பகல்- இரவாக நடைபெறுகிறது.
1984 ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் ஆசியக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி 4 முறையும், நடப்புச் சம்பியன் இலங்கை 3 முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் சம்பியன் பட்டம் வென்றுள்ளன.