இந்திய அணியில் மூத்தவர்கள், இளையவர்கள் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரில் மூத்த வீரர்கள் நீக்கப்பட்டதை கப்டன் தோனி நியாயப்படுத்தியுள்ளார். இதற்கு அஜித் வடேகர், பிஷன் சிங் பேடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் மூத்த வீரர்களை தேவையில்லாமல் சீண்டுவதாக காட்டமாகக் கூறியுள்ளனர்.
சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணி அசத்தலாக ஆடியது. பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைத்தது. அடுத்து நடந்த `ருவென்டி - 20', முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு மூத்த வீரர்களான சௌரவ் கங்குலி, டிராவிட், லட்சுமண் போன்றோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். சச்சின் மட்டுமே தப்பினார். இப்படி மூத்த வீரர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டதற்கு ஒரு நாள் அணியின் கப்டன் தோனி தான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.
முதலில் நடந்த `ருவென்டி-20' போட்டியில் இளம் இந்திய அணி, அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. உடனே வீரர்கள் தேர்வு குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ஆனால் முத்தரப்புத் தொடரில் தோனியின் அணி எழுச்சி கண்டது. முதலிரண்டு இறுதிகளில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது. இது இளமைக்கு கிடைத்த வெற்றி என்று தோனி பெருமிதமாகக் கூறினார். அப்போது மூத்த வீரர்களின் பங்கை மறந்துவிட வேண்டாமென சச்சின் எச்சரித்தார். இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டதாக நினைத்தபோது, மீண்டும் மூத்த வீரர்களை வம்புக்கு இழுத்துள்ளார் தோனி.
இது குறித்து இவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது;
ஒரு நாள் போட்டிக்கான அணியில் யார்... யார் இடம்பெற வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தேன். எனது விருப்பத்தை தேர்வாளர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் நான் எதிர்பார்த்த அணியை தேர்வு செய்தார்கள். இக்கட்டான நேரத்தில் மூத்த வீரர்கள் நீக்கப்பட்டதாக விமர்ச்சித்தார்கள். ஆனால் முத்தரப்புத் தொடரில் கிண்ணத்தை வென்ற பிறகு, எனது முடிவு சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. விமர்சிப்பவர்கள் அணிக்கு ஆதரவு தருகிறார்களா? அல்லது தனிப்பட்ட சில வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களா? என்று தெரியவில்லை.
ஒரு கட்டத்தில் இளம் அணியின் திறமை பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் கோப்பை வென்று சாதித்தோம். இனியாவது எங்களது ஆட்டத்தை பாராட்டலாமே? துவக்கத்தில் நடந்த `ருவென்டி-20' போட்டியில் மிக மோசமாக தோல்வி அடைந்தோம் என்றால்... முத் தரப்பு தொடரில் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றோம். வலிமையான அவுஸ்திரேலிய அணியை, அதன் சொந்த மண்ணில் வைத்து தொடர்ந்து இரண்டு இறுதிகளில் வென்றதை மாபெரும் சாதனையாக கருதுகிறேன்.
அவுஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றியை மட்டும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு அணியின் தரத்தை உயர்த்த வேண்டும். வரும் போட்டிகளிலும் வெற்றிநடையை தொடர வேண்டும். இவ்வாறு தோனி கூறினார்.
இவரது இந்தப் பேட்டி தான் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தென்ஆபிரிக்க டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 26 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதில் முத்தரப்பு தொடரில் நீக்கப்பட்ட டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் மீண்டும் அணிக்குத் திரும்புகின்றனர். இந்த நேரத்தில் மூத்தவீரர்களை பற்றி தேவையில்லாமல் தோனி பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு நாள் கப்டன் என்ற முறையில் இவர் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என முன்னாள் இந்திய வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
அஜித் வடேகர் (முன்னாள் கப்டன்): மூத்தவீரர்களின் ஆட்டத்தை பார்த்து வளர்ந்தவர் தான் தோனி. அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துகளை வெளியிட வேண்டிய அவசியமில்லை. அணியின் வளர்ச்சியில் மூத்த வீரர்களின் பங்கு மகத்தானது. இதனை வளரும் தலைமுறையினர் புரிந்துகொண்டு உரிய மதிப்பு அளிக்க வேண்டும். தோனியின் கருத்துக்களால் மூத்தவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை.
பிஷன் சிங் பேடி (முன்னாள் கப்டன்) : மூத்தவர்கள் பற்றிய தோனியின் கருத்துகள் அணியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கப்டனாக இவர் இன்னும் முதிர்ச்சி பெற வேண்டும். தான் நினைப்பதை வெளிப்படையாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருப்பதில் தவறு எதுவும் இல்லை என்பதை தோனி புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
மன்சூர் அலி கான் பட்டோடி (முன்னாள் கப்டன்) : தோனி போன்ற வீரரிடம் இருந்து இத்தகைய கருத்துகளை எதிர்பாக்கவில்லை. கப்டன் தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். தற்போது தான் தலைபை் பொறுப்பை ஏற்றுள்ளார். போகப் போக நிதானமாகப் பேசுவார் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையே மூத்த வீரர்களின் பங்களிப்பை மறந்துவிட வேண்டாமென தேர்வாளர்களை சௌரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு நாள் போட்டிக்கான அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.