பாகிஸ்தானில் புதியதாக அமையப் போகும் அரசுடன் இணைந்து பணியாற்றுவேன் என ஜனாதிபதி முஷாரப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என் ) கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றன. முஷாரப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சி குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றது.
இதையடுத்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையில் அடுத்த வாரம் புதிய அரசு அமையவிருக்கிறது. முஷாரப் ஆதரவு பெற்ற கட்சி தோல்வியைத் தழுவியதால் புதிய அரசுக்கு எதிராக முஷாரப் செயற்படுவார் எனக் கருதப்பட்டது.
இந்நிலையில், சிந்து மாகாண காபந்து அரசின் முதல்வர் அப்துல் காதிர் ஹலிபோடா, உள்துறை அமைச்சர் ஹமித் நவாஸ்கான் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் புதிய அரசுடன் சுமுகமாக இணைந்து பணியாற்றப்போவதாக முஷாரப் தெரிவித்தார்.
"பாகிஸ்தானை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் எனது பணி தொடரும் .அனைத்து விதங்களிலும் புதிய அரசுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன் என்றார்" முஷாரப்.
நாட்டில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்தும் தீவிரவாதிகள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், பாகிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு கானிடம் முஷாரப் கேட்டுக் கொண்டார்.